×

மழலை வரமருளும் பிரார்த்தனைகள்

காஞ்சிபுரம்-வந்தவாசி வழியில் காஞ்சிபுரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தூசி கிராமத்தில் அமைந்துள்ள வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் அருள்கிறார், சந்தானவல்லித் தாயார். பெயருக்கேற்றார் போலவே வேண்டுவோருக்கு சந்தான பாக்கியத்தைத் தருகிறாள்.

நெல்லை-தென்காசிக்கு அருகில் உள்ளது, ஆய்க்குடி ஹரிராம சுப்ரமண்யர் கோயில். இத்தல முருகனுக்கு படிப்பாயசம் நிவேதிப்பதாக நேர்ந்து கொண்டால் அவர்கள் வீட்டில் விரைவில் மழலைக் குரல் கேட்கிறது.

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை டாக்டர் நடேசன் சாலையில் உள்ளது அங்காளபரமேஸ்வரி ஆலயம். இந்த அன்னைக்கு குழந்தைகளுக்கு பால் புகட்டும் பாலாடையை சமர்ப்பித்தால் உடனே குழந்தை வரம் கிட்டுகிறது.

திருத்தணி அருகே உள்ள நெமிலி வைகுண்டப் பெருமாள் ஆலயத்தில் அருளும் காளிங்கநர்த்தனப் பெருமாளை ரோகிணி நட்சத்திர தினத்தன்று  தரிசித்து வேண்டிக் கொண்டு, சந்தான பாக்கியம் பெறலாம்.

கும்பகோணம்  ஆவூர் தஞ்சை செல்லும் சாலையில் அமைந்துள்ளது, ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கண்ணன் ஆலயம். இந்த குழந்தைக் கண்ணன் அருளால் மழலைச் செல்வம் பெற்றோர் ஏராளம்.

சென்னை, கோயம்பேடு  ஆவடி வழியே திருவள்ளூர் செல்லும் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக இராமாபுரம் (புட்லூர்) உள்ளது. இங்கு மல்லாந்து படுத்தபடி அருளும் புள்ளத்தாச்சி அம்மன் எனும் பூங்காவனத்தம்மன், பிள்ளை வரம் தருவதில் நிகரற்றவள்.  

காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில் அருளாட்சி புரியும் மரகதவல்லித் தாயார் குழந்தை வரம் தரும் அன்னை. வறுத்த பயிறு முளைக்கும் அதிசயம் இங்கே நிகழ்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் ஆலயத்தில் தனி சந்நதி கொண்டருளும் ஊரகத்தான் எனும் ஆதிசேஷனுக்கு பால் பாயசம் நிவேதிப்பதாக பிரார்த்தனை செய்வோருக்கு மழலை வரம் கிட்டுகிறது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் சந்தான கிருஷ்ணரின் அழகிய சிலையை மடியில் ஏந்தி மனமுருக பிரார்த்தனை செய்தால் பிள்ளை பாக்கியம் உடனே ஆசிர்வதிக்கப்படுகிறது.

சென்னை  மேற்கு சைதாப்பேட்டை, வி.ஜி.பி. சாலையில் உள்ள அனுமன் ஆலயத்தில் வெளிப்புறம் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட மேடையில் ராகுகேது அருள்கின்றனர். ராகுகால வேளையில் இந்த ராகு கேதுவுக்கு சிறப்பாக பூஜை செய்ய, நாகதோஷம் அகன்று அவர்கள் இல்லத்தில் மழலைக் குரல் கேட்கிறது.

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆலயத்தில் அருளும் சந்திரசேகர சுவாமியிடம் நேர்ந்து கொண்டவர்களுக்கு தட்டாமல் குழந்தை வரம் கிட்டுகிறது.

புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகில் உள்ள மணல்மேல்குடி ஜகதீஸ்வரர் ஆலய நாயகி ஜகத்ரட்சகி, கரு ஆரோக்கியமாக வளர அருள்புரிகிறாள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள நாகநாத சுவாமியை தரிசிப்பவர்களுக்கு தடைகள் நீங்கி மகப்பேறு கிட்டுகிறது.

நாகர்கோவிலில் அருளும் நாகராஜனை தரிசித்து அவர் சந்நதியில் தரப்படும் அருமருந்தான புற்றுமண் பிரசாதத்தை பக்தியுடன் தரிப்பவர்களுக்கு சந்தான
பாக்கியம் கிட்டுகிறது.

விருதுநகர், சேத்தூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருளும் ஆதி புத்திரங்கொண்ட அய்யனார் மழலை வரம் தந்து பக்தர்களை மகிழ்விக்கிறார்.

சங்கரன் கோவிலில் அன்னை கோலோச்சும் சந்நதியைச் சுற்றி உள்ள கிரி வீதியை 108 முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறி, மழலை பாக்கியம் கிட்டுகிறது.

மதுரை-மானாமதுரை சாலையில் உள்ள மடப்புரம் காளியின் சந்நதியில் குழந்தை வரம் வேண்டுவோர் தன் சேலையின் நுனியைக் கிழித்து அதில் சிறு கல்லை வைத்து அங்குள்ள வேப்பமரத்தில் கட்டி வைக்கிறார்கள். அந்த நம்பிக்கை மழலைப்பேறு வழங்குகிறது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணனை மனமுருக பிரார்த்தனை செய்து வெண்ணெய் நிவேதித்தால் அவர்களுக்கு கட்டாயம் குழந்தை வரம் கிட்டும்.

திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பக ரட்சாம்பிகை கருவறை படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு நெகிழ்ந்து வணங்குவோருக்கு கருத்தரிக்கும் பாக்கியமும் அந்தக் கரு ஆரோக்கியமான குழந்தையாகப் பிறக்கவும் வரமளிக்கிறாள் அன்னை.

சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஆலயத்தில் அருளும் சந்தான லட்சுமிக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால் அவர்கள் வீட்டில் மழலை சத்தம் விரைவில் கேட்கிறது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?