ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரபெருவிழா நடைபெற்றது. கடந்த 10ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடைபெற்றன. மாலையில் சமய சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று அதிகாலை காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிருந்து வேல் காவடி, மயில்காவடி, பறவைக்காவடி, பால்காவடி, பன்னீர்காவடி, சப்பரகாவடி, பால்குடம் என பல விதமான காவடிகள் எடுத்து வந்தனர்.