×

தனித்த அழகோடிருக்கும் தெய்வானை

சூரபத்மன் எனும் அரக்கன் வேறொரு அட்டகாசங்கள் செய்வதாகவும் அதை பார்வதி தேவியிடம் தெரிவித்த போது குமரன் வதம் செய்வான் என்று அருளிச் சொன்னதைச் சொன்னார்கள். அந்தக் காட்டின் அமைதி, குமரனை அங்கு வெகுகாலம் குடிகொள்ளச் செய்தது. இரு வதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தனிமை தவம்போன்ற ஒரு பக்குவத்தை அந்த மதுவனம் அவனுக்குத் தந்தது. கந்தனையே மணம்புரிய விரும்பிய தெய்வானை எனும் கன்னிகையின் தவத்தை காணநேர்ந்ததும், அடுத்ததொரு வதம் இருப்பதை சூட்சுமமாக சுட்டிக்காட்டிய தாயின் திருவடியை மனதுக்குள் தியானித்துக் கொண்டு கானகம் விட்டகன்றார் கந்தன். சூரபத்மனை வதைத்து, தனக்காக தவம் இருந்த தெய்வானையை மணந்து, அடுத்து வள்ளியையும் திருமணம் புரிந்து தான் மிகவும் விரும்பிய இந்த கானகத்திற்கு வந்து கந்தன் குடிகொண்டு அடியார்களுக்கு அருள் மழை பொழிந்தான்.

அதனால்தான் இன்றும் இத்தலம் கந்தன்குடி என்றே விளங்குகிறது. தவமிருந்து தெய்வானை பார்த்த தலத்தை நாமும் காண்போமா? அன்று கந்தன் பார்த்த கானகம்போல் அடர்ந்த மரங்கள்மட்டும்தான் இல்லை. ஆனால், பச்சைபசேலென பரவியிருக்கின்றன விளைநிலங்கள். சிலுசிலுவென மனதை குதூகலப்படுத்துகிறது தென்றல். இயற்கை அற்புதத்தின் மத்தியில் அழகுக் குமரன் கோயில் கொண்டிருக்கிறான். கிழக்கு நோக்கிய கோயில். வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம். அதன் மேல் விதானத்தில் அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகே தெய்வானைக்கு தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த அருட்களை முகத்துடன், சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்து அருள்கிறாள், தெய்வானை. சிறியதாக இருந்தாலும் நின்று பார்க்கவைக்கும் தெய்வீக வசீகரம் பொலியும் திருச்சந்நதி.

இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும் அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன. அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி&தேவசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். சொந்த ஊருக்கு வரும் தலைமகனை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும், அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறையை நெருங்கும்போது ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இதற்கா இவ்வளவு பயந்தோம் என்ற ஆன்ம பலம் சேர, நாள்பட்ட துயரங்கள் எல்லாம் தூசாகப்பறந்து போகின்றன. வள்ளியும், தெய்வானையும் கந்தனின் ஆட்கொள்ளும் அதிசயத்துக்கு அந்தரங்க சாட்சியாகக் காட்சி தருகிறார்கள்.  இந்த கந்தவேளை அருணகிரிநாதர் பரவசமாகப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.  இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால்; மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடியை காணலாம்.

கிருஷ்ணா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?