எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது

‘‘பன்னிரு சீடர்களுள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை, உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?’’ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக்காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக்காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத்தேடிக் கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்? என விரும்புகிறீர்?’’ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது’’ என் சீடர்களோடு  உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் அவர்கள் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘‘உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான்’’ என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘‘ஆண்டவரே! அது நானா?’’ என ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிட மகன் தம்மைப்பற்றி மறை நூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு கேடு. அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு  நலமாய் இருந்திருக்கும்’’ என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும், ‘‘ரவி, நானோ?’’ என்று அவரிடம் கேட்க, ‘‘நீயே சொல்லி விட்டாய்’’ என்றார்.  (மத்தேயு 26: 1425) நம்பிக்கைத் துரோகத்தால் மனம் புண்படும்போது அதனைப்பற்றியே எல்லோரிடமும் புலம்பித் தள்ளிப் பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்வோர் ஒருபுறம்! மனதில் வஞ்சகத்தைப் பதியவிட்டு பழிக்குப்பழி வாங்கத் துடிப்போர் மறுபுறம்!

சினிமா, நாடகங்களில் பழிக்குப் பழி வாங்கும் கதாபாத்திரங்களை பார்த்து நாம், விசிலடித்துக் கொண்டாடுகிறோம். நம்பிக்கைத் துரோகத்தை மறந்து மன்னிக்கும் மாண்பை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்! இயேசு மன்னிக்கும் பண்பாட்டைக் கையிலெடுக்கின்றார். நம்மை அளவுக்கு அதிகமாக நம்பி நற்செய்திப் பணிகளை  வாழ்வால் அறிவிக்கும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார். இயேசுவின் அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யும் அனைவரும் வாழும் யூதாஸ்களே  என்பதை உணர்வோம். இயேசுவின் எதிர்பார்ப்புகளை நாம் வாழ்வாக்காதபோது, இயேசுவிற்கும் மரித்ததிற்கும் எதிராக நாம் துரோகம் இழைக்கிறோம்.ஒவ்வொரு சிறு தவறும் நாம் நம் மனசாட்சிக்கு எதிராகச் செய்யும் செயலாகும். மனசாட்சி இறைவனது குரல். இந்தப் பாவச்செயலை நாம் பலவீனத்தாலும், அறியாமையாலும், பேராசையினாலும் செய்கின்றோம். ஆகவே, இச்செயல்கள் தன்னிலேயே பாவத்தன்மை நிறைந்ததாகவே உள்ளது.

 

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: