மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோயிலில் 91ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது. மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் பகுதியில் 90 ஆண்டு பழமைவாய்ந்த மைதானம் மாரியம்மன் கோயில் உள்ளது இங்கு 91ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 8.00 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து நாதஸ்வர மேளதாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும் ஆடிப் பாடி வந்தனர்.
காலை 10 மணிக்கு கோயில் தலைமை பூசாரி மோகன் குமார் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கையில் சூலாயுதம் எடுத்து குண்டம் இறங்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.