நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பர்ணேற்று திருவிழா கடந்த 7ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் அரசியல் கட்சி பிரபலங்கள் மற்றும் சினிமாத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பர்ணேற்று நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அம்மன் பரண் மேல் எழுந்தருளினார். தொடர்ந்து பத்ரகாளி அம்மனுக்கும், தாரகாசுரன் என்ற அரக்கனுக்கும் பரண் மேலிருந்த வண்ணம் நேற்று அதிகாலை 3 மணி வரை சொற்போர் நடந்தது.
தொடர்ந்து களம் காவல் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் அம்மனுக்கும், அரக்கனுக்கும் நிலத்தில் போர் நடந்தது. இதில் பத்ரகாளி அம்மன் தாரகாசுரனை வதம் செய்தார். இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது. அம்மன் ஆனந்த நடனமாடியதை தொடர்ந்து காளியூட்டு நிகழ்ச்சி நடந்தது. பர்ணேற்று நிகழ்ச்சியை காண குமரி மாவட்டம் மட்டுமின்றி திருவனந்தபுரம், கொல்லம் மாவட்ட பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.