×

மழைத் தொழுகை

நாளிதழ்களில் அவ்வப்போது ஒரு செய்தியைப் பார்த்திருக்கலாம். “மழைவேண்டி முஸ்லிம்கள் கூட்டுப்பிரார்த்தனை.” இன்று நேற்றல்ல, இறைத்தூதர்  நபிகளாரின் காலத்திலிருந்தே இந்த மழைத் தொழுகை நடைமுறை இருந்து வந்துள்ளது. இறைவனின் பேரருளான மழை தடைபடும் போது நபிகளார்(ஸல்)  மழைவேண்டி சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். அத்தகைய ஒரு நிகழ்வை அன்னை ஆயிஷா அவர்கள் அறிவித்துள்ளார். மழை இல்லாமல் மக்களும்  கால்நடைகளும் சிரமப்பட்டபோது மக்கள் இறைத்தூதரிடம் வந்து முறையிட்டார்கள். உடனே நபிகளார் மக்களைத் திறந்த வெளித்திடலில் ஒன்று திரள ஒரு  நாளைக்குறித்தார்கள். குறிப்பிட்ட நாளில் மக்களும் ஒன்று திரண்டனர்.

நபிகளார்(ஸல்) அங்கிருந்த உரைமேடையில்(மிம்பர்) ஏறி நின்று மக்களை நோக்கி, “உங்களைச் சுற்றியுள்ள பகுதியில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது  பற்றி முறையிட்டீர்கள். உங்கள் தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும்படி இறைவன் ஆணையிட்டுள்ளான்” என்று  கூறிவிட்டுப் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள். “அனைத்துப் புகழும் அகிலங்களின் அதிபதியாகிய இறைவனுக்கே உரியது. அவன் அருளாளன். கிருபையாளன். கூலி கொடுக்கும் நாளின் அதிபதி.  வழிபாட்டுக்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை. தான் விரும்பியதை அவன் செய்வான்.

“இறைவா, நீயே வணங்கப்படுபவன். உன்னைத் தவிர வேறு யாரும் வணங்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள்.  நீ எந்தத் தேவைகளும் இல்லாதவன். நாங்கள்தாம்  தேவையுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் மீது மழையைப் பொழியச் செய்வாயாக. நீ இறக்கி வைத்ததை எங்களுக்கு வலிமை தரக்கூடியதாகவும் நீண்ட காலம்  வரை பயனுள்ளதாகவும் ஆக்கிவைப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு கையை உயர்த்தினார்கள். நீண்ட நேரம் கையை உயர்த்தியபடி பிரார்த்தித்தார்கள்.  பிறகு தொழும் திசையை நோக்கி நின்று, தம் மேலங்கியை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பிறகு உரைமேடையிலிருந்து கீழே இறங்கிவந்து மழை வேண்டி  சிறப்புத் தொழுகை தொழ வைத்தார்கள்.

உடனே வானத்தில் மேகங்கள் திரண்டன. இடி இடித்து மின்னல் வெட்டியது. பிறகு இறைவனின் நாட்டப்படி மழை பொழிந்தது. நபியவர்கள் அந்த  மைதானத்திலிருந்து பள்ளிவாசலுக்கு வருவதற்கு முன்பே ஓடைகளிலும் வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையிலிருந்து தங்களைத்  தற்காத்துக்கொள்ள மக்கள் இங்கும் அங்கும் ஓடுவதைப் பார்த்த இறைத்தூதர் அவர்கள், மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள். (ஆதாரம்: அபூதாவூத்  முதல் பாகம்)

இந்த வாரச் சிந்தனை

“பளீரெனத் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும் ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும் அவன்தான்  (நீர் நிறைந்த) கனமான மேகத்தை எழுப்புகிறான்.” (குர்ஆன் 13:12)

சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்