×

அழிவுக்குரியது, அழியாமைக்குரியது

தண்ணீருக்கு உருவம் இருக்கிறது; ஆனால் நீராவியில் இருக்கும்போது அதற்கு உருவம் இல்லை. நெருப்புக்கு உருவம் உண்டு; ஆனால் அது விறகில் இருக்கும்போது அதற்கு உருவம் இல்லை. அதுபோல கடவுளுக்கு உருவம் இருக்கிறது, அவர் உருவம் இல்லாதவராகவும் இருக்கிறார். கடவுளிடம் அனைத்து உயிர்களும் ஒன்றுபட்டிருக்கின்றன.‘‘இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்? என ஒருவர் கேட்கலாம். நீ விதைக்கும் விதை மடிந்தால் ஒழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை. மாறாக வெறும் விதையையே தான் விதைக்கிறாய். கடவுளோ தம் விருப்பப்படி அதற்கு ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவைக் கொடுக்கிறார்.

எல்லா ஊனும் ஒரே வகையான ஊன் அல்ல. மானிடருக்கு ஒருவகையான ஊனும், விலங்குகளுக்கு இன்னொரு வகையான ஊனும், பறவைகளுக்கு வேறொரு வகையான ஊனும், மீன்களுக்கு மற்றொரு வகையான ஊனும் உண்டு. விண்ணைச் சார்ந்தவைகளுக்கு ஒரு வகையான உருவமும், மண்ணைச் சார்ந்தவைகளுக்கு இன்னொரு வகையான உருவமும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு. மண்ணைச்சார்ந்தவற்றின் அழகு வேறு. கதிரவனின் சுடர் ஒன்று, நிலவின் சுடர் இன்னொன்று, விண்மீன்கள் சுடர் மற்றொன்று. விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது. இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.

மறைநூலில் எழுதியுள்ளபடி முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று, மனித இயல்புள்ளவர் ஆனார். கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர். அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச்சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம். ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. அழிவுக்குரியது அழியாமையை உரிமைப்பேறாக அடைய முடியாது.’’  (1 கொரிந்தியர் 15: 3550).

ஒரு குரங்கின் கையில் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி கிடைத்தது. அதை எடுத்து தன் முகத்தைப் பார்த்துவிட்டு கோபத்தோடு, நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன். ஆனால் இது என்னை ஒரு குரங்கு போலக் காட்டுகிறதே என்று சொல்லி கீழே வைத்து விட்டது. சற்று நேரம் கழித்து மீண்டும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தது. குரங்கு போன்ற தனது முகத்தைக் கண்டு மீண்டும் வைத்து விட்டது. மூன்றாவது முறை எடுத்துப்பார்த்தபோது அதற்குக் கடும் கோபம் வந்து விட்டது. கண்ணாடியில் ஏதோ தவறு இருக்கிறது. அழகாய் இருக்கும் என்னை அசிங்கமாய்க் காட்டுகிறதே என்று கண்ணாடியைக் கீழே போட்டு உடைத்தது. கோபம் தீர்ந்த பிறகு ஒரு சிறிய துண்டுக் கண்ணாடியை மெதுவாக எடுத்துப் பார்த்தது.

ஒவ்வொரு துண்டுக்கண்ணாடியும் அந்தக் குரங்கின் முகத்தையே காண்பித்தது. இறை வசனமானது முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறவன் தன் முகச்சாயல் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வான். ஆனால் சத்திய வேதமாகிய கண்ணாடி உங்கள் இருதயத்தைப் பார்க்கிறது. உங்களுக்கு உங்களைத் தெளிவாகக் காண்பிப்பதே இறை வார்த்தையாகிய கண்ணாடியின் நோக்கமாகும். இக்கண்ணாடியே உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வற்கு ஏதுவாகிறது.
 
‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags :
× RELATED காமதகனமூர்த்தி