உத்தமபாளையம்: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் மாசிமக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்ஞானாம்பிகை கோவில் மாசி மகத்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு சுவாமிஅம்பாள் ரதம் ஏறுதல் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. தேர் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு தேர் இழுப்பதற்கான கொடி அசைக்கப்பட்டது. உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்திநாதன், தேனி எஸ்.பி.பாஸ்கரன், பி.டி.ராஜன்பண்ணை டாக்டர் விஜய்ராஜன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்பு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேர் நான்குரத வீதிகளான பஸ்நிலையம் கோட்டைமேடு வழியாக ஊர்வலமாக வந்தது. தேர் மதியம் 3 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜமாத் கமிட்டி தலைவர் தர்வேஷ்மைதீன், அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், ஸ்ரீவிகாசா கல்விக்குழும தலைவர் இந்திராஉதயகுமார், எஸ்.பி.எம்.ஜெய்டெக் நிர்வாகி ஜெகதீஷ், திமுக முன்னாள் கவுன்சிலர் பத்திரமுருகேசன், எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன், ஞானம்மன் கோவில் தெரு மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் பல்வேறு சமுதாயங்களின் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி தலைமையில் 530 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.