×

நாகதோஷம் விலக்கி நல்லருள் புரிவார் காசி விஸ்வநாதர்

தொண்டை நன்நாட்டில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலங்களும் ஒன்றாகத் திகழ்கிறது பழங்காமூர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம். தவத்தில் சிறந்த முனிவர்கள் எழுவருள் ஒருவர் ஜமதக்னி முனிவர். குண்டலிபுரம் என்னும் படவேட்டில் வாழ்ந்த இந்த முனிவர் கடுந்தவச் சீலர்! அன்னை ரேணுகையின் கணவர். ஈசனின் இடப்பாகம் பெற வேண்டிய அம்பிகை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஓர் வாழைக்காட்டில் [கதலிவனம்] வாழைப்பந்தல் அமைத்து, அதில் மணலால் லிங்கம் பிடித்து வழிபட எத்தனித்தாள்! நீர் தேவை! உடன் தனது பிள்ளைகளாக கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டு வர கட்டளையிடுகின்றாள். கணபதி மேற்கு நோக்கி சென்றார். அங்கே ஜவ்வாது மலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அதை கண்ட கணபதி, காகமாக உருவெடுத்து, புனிதம் மிகுந்த அவரது கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது.

(இதற்கு முன்பு இதுபோல் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரியை உற்பத்தி செய்துள்ளார் கணபதி) அந்நதியே கமண்டல நதியானது! இந்நதியின் தீர்த்தம் கங்கையை விடவும் கால் மடங்கு புனிதம் மிக்கதாகும். இந்தக் கமண்டல நதியோடு, சம்புவராயநல்லு என்னுமிடத்தில் நாக நதி இணைவதால் இந்த நதியை கமண்டல நாக நதி என்று அழைப்பர்! தர்மாரண்ய க்ஷேத்திரம் என்னும் ஆரணி வழியே அற்புதமான இந்தக் கமண்டல நாக நதி பாய்ந்து, வாழைப்பந்தலில் கந்தனால் உண்டான செய்யாற்றோடு கலக்கிறது. இந்த தர்மாரண்ய க்ஷேத்திரத்தில் வடபுறம், கமண்டல நாகநதியின் வடகரையில், காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்றே இங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதர், அன்னை ஸ்ரீவிசாலாட்சியோடு அருட்பாலிக்கின்றார். த்ரேதா யுகத்தில் இத்தலத்தில் ரிஷ்ய சிருங்கர் எனும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார்.

அவர் பன்னெடுங்காலமாய் கமண்டல நதியில் ஸ்நானம் செய்து, வடகரையில் உள்ள காசி விஸ்வநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். அப்போது ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைக்கு (கமண்டல நதியின் தென்கரைக்கு) சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை அவருக்கு அற்புதமாய் நடத்தித் தந்தார். மேலும், தசரத மகா சக்ரவர்த்தியின் விருப்பத்திற்கு இணங்கி, தசரதரின் துணையோடு ஸ்ரீ புத்திரகாமேஷ்டீ ஈஸ்வரையும், நிறுவி, வழிபாடுகள் நடத்தினார். ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டலநதியின் வடகரையில் தானாக பூமியிலிருந்துத் தோன்றிய பெருமானாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் வீற்றெழுந்து அருட்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். ஊருக்குள்ளே வடபுறம் பழமை வாய்ந்த சிவாலயம் எழிலுற அமையப் பெற்றுள்ளது. கிழக்குப் பார்த்த ஆலயத்தின் முன்னே தோரணவாயில் உள்ளது.

தோரணவாயில் கடந்து உள்ளே செல்ல... நேரே நந்திதேவர், முன்னே பலிபீடம்! இது முகமண்டபம் அதை தாண்டி இடை மண்டபம். தொடர்ந்து கருவறை, கருவறையுள் அழகே உருவாய் லிங்கத் திருமேனி கொண்டு சாய்ந்த நிலையில் அற்புதமாக திருக்காட்சி தந்து, அருள்புரிகின்றார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். தெற்குப்புறம் அரசும் வேம்பும் இணைந்து காணப்படுகின்றது. அதன் கீழே நாகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அருகே நால்வர் தரிசனம். நிருருதி திசையில் தல கணபதி சந்நதி கொண்டுள்ளார். மேற்கில் வள்ளி தேவசேனாவுடன் ஸ்ரீ ஷண்முகர் எழுந்தருளி உர்னார். அம்பாள் சந்நதி இங்கு இறைவனுக்கு (வாம பாகத்தில்) இடப்புறம் உள்ளது. அம்பிகையாக ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் புன்னகை ததும்ப, புன்முறுவலுடன் அருள்மழை பொழிகின்றாள். வடக்கில் பைரவரும், ஈசான திசையில் நவகிரகங்களும், அருகே சூரியனும் வீற்றுள்ளனர். அருகே தல விருட்சமான வில்வமரம் உள்ளது.

காமிக ஆகம முறைப்படி ஒரு கால பூஜை நடந்திடும் இவ்வாலயத்தை ஊரார் துணை கொண்டு பகல் வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், சித்திரை வருடப்பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஆகிய விசேஷங்கள் சிறப்புற நடத்தப்படுகின்றன. இத்தல அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக் கொள்ள, உடன் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். நாக தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு நாக பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷ நிவர்த்தி அடைகின்றனர். சிறந்த வேலை வேண்டுவோர், பிரதோஷத்தன்று வழிபடவேண்டிய வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி அம்பாளுக்கு தேன் கலந்து பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து, விரைவில் பலனடைகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யார் செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர்.

பழங்காமூர் மோ.கணேஷ்

Tags : Kasi Vishwanath ,Nagarusham ,
× RELATED ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிப்பு