பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்

பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகள் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விழா. அத்துடன் விவசாயிகளுக்கு நாமெல்லாரும் நன்றி சொல்லும் விழாவும் கூட. பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று நம் விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளை நீராட்டி, அலங்கரித்து, கழுத்தில் மாலைகள் அணிவித்து கொம்புகளுக்கு வர்ணம் பூசி பொங்கல் வைத்து மஞ்சள் குங்குமமிட்டு வணங்குகிறார்கள். மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து அந்தப் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாமும் வணங்கும் நாளே மாட்டுப் பொங்கல்! கிராமப்புறங்களில் மாட்டுபொங்கல் கொண்டாட்டம் காலை முதலே களைகட்டும்.

சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள் தான் காளைகள். நந்தி, நன்மைகளின் சொரூபம். வம்சவிருத்தியின் அடையாளம். பசு இருக்குமிடத்தில் தீயசக்திகள் அண்டாது. நமக்கு கெடுதல் செய்யும் மனம் கொண்டவர்கள் நம் இல்லம் தேடி வந்தால், முன்கூட்டியே பசு குரல் கொடுத்து தெரிவிக்குமாம். தற்போதைய சூழலில் நகரங்களில் பசு வளர்ப்பதற்கு முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மாட்டுப் பொங்கலன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு பூஜை செய்யலாம். அன்று மாலை வேளையில் பசு வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு அழைத்து வருவார்கள்.

அப்பொழுது, அவர்களிடம் அனுமதி பெற்று கோவில் குருக்கள் மேற்பார்வையில் கோபூஜை செய்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். கோசாலை இருந்தால் அங்கும் பூஜிக்கலாம். மாட்டுப் பொங்கல் நாளில் சிவலிங்கத்திற்கு எதிரிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அறுகம்புல் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், நிலக்கடலை, கரும்பு படைப்பார்கள். அந்த வழிபாட்டில் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிபட்டால் வம்சம் நல்ல முறையில் வளரும். இவ்வாறு மாட்டுப் பொங்கல் திருநாளில் வழிபட்டு மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் அருளுடன் சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

Related Stories: