காரைக்கால்: காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோயிலில், நேற்று அதிகாலை நடைபெற்ற சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில், ரத்ன அங்கி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து ராபத்து நிகழ்ச்ச்சியின் முதல் கட்டமாக, பகல் பத்து கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. அதுசமயம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று முன்தினம்
பகல் பத்து முடிந்தது.
நேற்று ராபத்து துவங்கியது. ராபத்து முதல் நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதுசமயம், நேற்று அதிகாலை ரத்ன அங்கி அலங்காரத்தில் பெருமாள் முன், பின் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், பரமபத வாசல் திறப்பையொட்டி, வஜ்ராங்கியில் மூலவர் ரங்கநாத பெருமாளும், உற்சவர் நித்தியக்கல்யாண பெருமாளையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜ பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோயில்பத்து கோதண்டராமர் கோயிலிலும், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள் கோயிலிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில், அறங்காவல் குழுவினர், ஊழியர்கள் மற்றும் பெருமாள் பக்தஜன சபாவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.