×

குலதெய்வத்தினை பூஜிக்க குலம் விருத்தியடையும்!

29 வயதாகும் என் மகன் காதல் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சில மாதங்களுக்கு முன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார்கள். குழந்தை பாக்கியம் இல்லை என்ற மன வருத்தத்துடன் உள்ளான். குழந்தை பிறக்குமா? அவன் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? வெளிநாடு ஏதும் செல்வானா? எங்களுடன் கூடி வாழ்வார்களா? - சந்திரசேகர், சென்னை.

மகன் உங்களை விட்டு தனிக்குடித்தனம் சென்றாலும் சதா அவரைப் பற்றிய சிந்தனையோடு இருந்து வருகிறீர்கள் என்பது உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. மகனின் ஜாதகத்தை அனுப்பியிருக்கும் நீங்கள் மருமகளின் ஜாதகத்தையோ பிறந்த தேதி மற்றும் நேரம் முதலான விவரங்களையோ குறிப்பிடவில்லை. குழந்தை பாக்கியம் பற்றி ஆராயும்போது இருவரின் ஜாதகங்களையும் கணித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும்

உங்கள் மகனின் ஜாதகத்தை கணிதம் செய்ததில் பிள்ளைப் பேற்றினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டின் அதிபதி குரு பகவான் ஏழில் அமர்ந்து ஜென்ம லக்னத்தின் மீது தனது தீட்சண்யத்தை செலுத்துவது தெளிவாகிறது. ஐந்தாம் வீடு சுத்தமாக இருப்பதால் புத்திர தோஷம் என்பது இல்லை. குருவுடன் சூரியன் மற்றும் புதன் ஆகிய இருவரும் இணைந்திருப்பதும் சாதகமான நிலையே என்றாலும், ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் நீசம் பெற்றிருப்பது ஒரு சில சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. முந்தைய தலைமுறையில் நடந்த உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் துர்மரணம் வம்சவிருத்தியை தடை செய்யக்கூடும். மேலும் குலதெய்வத்தின் அனுக்ரஹமும் குறைவாக உள்ளது.

உங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை நீங்கள் அறிந்திருந்தாலும் சரி, அல்லது பெரியவர்கள் மூலமாக கேள்விப்பட்டிருந்தாலும் சரி, அதற்குரிய பரிகாரத்தை குடும்பத்தின் புரோஹிதர் மூலமாக செய்து முடியுங்கள். குலதெய்வம் கோவிலுக்கு மகனையும், மருமகளையும் அழைத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுங்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது 09.04.2020 வரை சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இந்த தசாபுக்தி காலம் குழந்தைப் பேறு கிடைப்பதற்கான காலமே. நேரத்தினை உபயோகப்படுத்திக் கொண்டு குறைகளைச் சரி செய்தீர்களேயானால் வம்ச விருத்தி நிச்சயம் உண்டாகும்.

அவருடைய உத்யோக முன்னேற்றத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள். பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது ஓரிடத்தில் நிரந்தரமாக அமர்ந்து செய்யும் தொழிலைத் தரமாட்டார். அலைந்து திரிந்து செய்யும் தொழில் இவருக்கு சரியாக பொருந்தி வரும். வெளிநாடு செல்லவும் முயற்சிக்கலாம். கால நேரம் அதற்கு துணை செய்தாலும், முதலில் மேற்சொன்ன குறைகளைச் சரிசெய்து வம்ச விருத்தி என்பது உண்டாகட்டும். குழந்தை பிறக்கின்ற நேரம் இவருடைய வாழ்வியல் நிலையிலும் முன்னேற்றத்தினை உண்டாக்கக் காண்பீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றமும் நல்ல சம்பாத்தியமும் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும். உத்யோக நிமித்தம் பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்தாலும், என்றென்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பதோடு பெற்றோரை நல்லபடியாகவும் பார்த்துக் கொள்வார்.

தனிக்குடித்தனம் சென்றிருந்தாலும் உங்கள் மீதான அக்கறை என்பது அவருக்கு என்றென்றும் உண்டு. உங்களோடு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அவருடைய உத்யோக முன்னேற்றத்திற்காக அவர் தனிக்குடித்தனம் இருப்பதில் தவறில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். குலதெய்வத்தினை தொடர்ந்து பூஜித்து வர உங்கள் குலம் விருத்தி அடைவதை விரைவில் காண்பீர்கள்.

எனது இளையமகள் தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாள். திருமணமாகி மூன்று ஆண்டுகள்ஆகிறது. அவர்களுக்கு எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? அவள் பி.ஈ., எம்.பி.ஏ., படித்திருந்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது வேலை கிடைக்கும்? அவர்களது எதிர்காலம் எப்படி உள்ளது? - ராமசாமி, கடலூர்.

மகள் அமெரிக்காவில் வசிக்கிறாள் என்ற பெருமை இருந்தாலும், நன்கு படித்திருக்கும் அவளுக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், குழந்தைப் பேறு குறித்த கவலையும் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகப்படி தற்போது குரு தசை நடந்து  வருகிறது. குழந்தைப் பேறினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரியன் ஏழில் நீசம் பெற்றதுடன் உச்சம் பெற்ற சனியுடன் இணைந்திருப்பது பிள்ளைப்பேற்றினை தடை செய்து வருகிறது.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான நிலையே என்றாலும், புத்திர ஸ்தான அதிபதி சனி, ஜென்ம லக்னத்தில் புத்திர காரகன் ஆகிய குருவுடன் இணைந்திருப்பதால் நிச்சயம் குழந்தை பாக்கியம் என்பது கிடைத்துவிடும். உத்யோகத்தைப் பொறுத்தவரை உங்கள் மகளின் ஜாதகத்தில் ஜீவனஸ்தானத்தில் செவ்வாயின் உச்ச பலம் நிரந்தர உத்யோகத்தைப் பெற்றுத் தரும், ஆனால் அது அந்நிய தேசப்பணியாக அமையாது. உள்நாட்டில்தான் அவருக்கான வேலை என்பது அமையும். எது எங்கே கிடைக்குமோ, அதை அங்கேதான் தேடவேண்டும்.

பண்ருட்டியில் கிடைக்கும் பலாப்பழத்தினை பட்டுக்கோட்டையில் தேடினால் அது சரியாக இருக்குமா? உங்கள் மகளுக்கான நிரந்தர உத்யோகம் என்பது இந்தியாவில்தான் இருக்கிறது. உங்கள் மருமகனின் ஜாதகப்படியும் வருகின்ற 22.04.2019ற்கு மேல் உத்யோக ரீதியான மாற்றம் என்பது வந்து சேரும். அந்த நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு தம்பதியர் இருவரையும் இந்தியாவில் வேலை தேட முயற்சிக்கச் சொல்லுங்கள்.

இவர்கள் இருவரின் ஜாதகபலத்தின்படி இவர்கள் அந்நிய தேசத்தில் பணி செய்வதை விட உள்நாட்டில் பணி செய்வதே இவர்களுக்கு அதிக நன்மையைத் தரும். இவர்கள் இருவரின் உடல்நிலையும் உள்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு உகந்தவாறே உள்ளது. தாய்நாட்டில் வீசும் காற்றினை சுவாசிக்கும்போது உங்கள் மகள் தாய் ஆவதற்கான அம்சம் சிறப்பாக உள்ளது. மருத்துவரீதியான இந்த உண்மையைப் புரிந்து கொள்வதோடு, தம்பதியரின் வயதினையும் கருத்தில் கொண்டு விரைவில் வம்ச விருத்தி காண்பதற்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், மனம் நிறைவடைந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நிலைத்திருக்கும்.

இருவரின் ஜாதகபலத்தின்படி உள்நாட்டில் இருப்பதால் உத்யோக பலம் கிடைப்பதோடு, புத்திர பாக்கியமும் தடையின்றி கிடைத்துவிடும் என்ற உண்மையை அவர்களுக்குச் சொல்லி புரிய வையுங்கள். உங்கள் மகளிடம் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து துளசிச் செடிக்கு பூஜை செய்து வணங்கி வரச் சொல்லுங்கள். தினமும் அதிகாலைச் சூரியனை வழிபட்டு வருவதாலும் சூரியனின் நீசதோஷம் நீங்கிவிரைவில் புத்திரபாக்கியம் கிடைக்கும். நிரந்தர உத்யோகம் கிடைப்பதோடு வாழ்விலும் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.

என் மகன் கடந்த ஒரு வருடமாக நோயால் அவதிப்படுகிறான். அவனுக்கு தற்சமயம் ராகு தசை நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதமாக தூக்கமும் இல்லை. மனம் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது. என் மகனின் உடல்நிலை எப்பொழுது சரியாகும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? - ஜெயலட்சுமி, திருவள்ளூர்.

பாம்பு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ராகு தசை என்பது அவருக்கு இன்னும் துவங்கவில்லை என்பது தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடந்த ஒரு வருட காலமாக செவ்வாய் தசையில் சூரிய புக்தியும், சந்திர புக்தியும் நடந்துவருகிறது. சூரிய புக்தியின் துவக்கத்தில் உடல்நிலையில் பாதிப்பும், சந்திர புக்தியில் உடல்நிலை சரியாகி வந்தாலும் மனநிலையில் லேசான பாதிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேதுவும், ஜென்ம லக்னாதிபதி சனி மூன்றில் நீசம் பெற்றும், ரோகத்தினைப் பற்றிச் சொல்லும் ஆறில் புதனும், ஆறாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் எட்டில் அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான உடலமைப்பினை உருவாக்கி இருக்கிறது. ராகு தசை துவங்கிவிட்டால் இவரது உடல்நிலையிலும், மன நிலையிலும் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள். 22.12.2018 முதல் துவங்கும் ராகு தசை இவரது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரத் துவங்கும். அதுவரை உங்கள் மகனை தனிமையில் இருக்க அனுமதிக்காதீர்கள்.

தனிமையில் இருக்கும்போது அநாவசியமான சிந்தனை மனதைக் குழப்பும். முடிந்த வரை தனிமையைத் தவிர்த்து நண்பர்களோடு இணைந்திருக்கச் செய்யுங்கள். ராகு பகவான் ஏழில் அமர்ந்திருப்பதால் நண்பர்களால் இவருக்கு நிச்சயமாக உதவி கிடைக்கும். நண்பர்களோடு தனது மனதில் இருக்கும் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதால் பாரம் குறைந்து மனம் இலகுவாகும். மனதில் தெளிவு உண்டாகும்போது உடல்நிலையிலும் முன்னேற்றம் உண்டாகக் காண்பீர்கள். ராகு தசையில் மனம் சுறுசுறுப்படைவதோடு, உடல்நிலையும் சீரடைந்துவிடும். புதன்கிழமை தோறும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை அதிகாலையில் சுப்ரபாத சேவையில் தரிசித்து வணங்குவதால் உங்கள் மகனின் உடலிலும்,  உள்ளத்திலும் மாற்றத்தினைக் காண்பீர்கள்.

32 வயதாகும் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும். வெஜிடேரியன் ஆக உள்ளவர் வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. சுயதொழில் செய்கின்ற எனக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. புளூ கிராஸ் மாதிரியான அமைப்பில் சேவை செய்திட வேண்டும் என்பது என் விருப்பம். மன மொத்த வாழ்க்கை அமைந்திடவும், என் லட்சியத்தை அடைந்திடவும் நான் என்ன செய்யவேண்டும்? - விஜயலக்ஷ்மி, மதுரை.

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்களுக்கு மனதில் குழப்பம் என்பது அதிகமாக உள்ளது. முதலில் நீங்கள் மனதில் தெளிவு காண முயற்சிக்க வேண்டும். நாம் கேள்விப்படும் எல்லா சம்பவங்களோடும் நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஒரே சம்பவத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான உணர்வுகள் உண்டாகும். ஒரு சம்பவத்தின் மூலம் ஒருவருக்கு நன்மை நடக்கிறது என்றால், மற்றொருவருக்கு அது தீமையாகத்தான் இருக்கும்.

இது வாழ்க்கை நியதி. மெடிக்கல்ஸ் வைத்திருப்பவருக்கு வியாபாரம் பெருகி நல்ல தனலாபம் கிடைக்கிறது என்றால் அது பத்து பேருக்கு உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டால்தான் நடக்கும். இந்த நிகழ்வு மருந்துக்கடைக்காரருக்கு நன்மையை உண்டாக்கினாலும், மற்ற பத்து பேருக்கு தீமையைத் தருகிறது. அதனால் அதிகம் ஆராய்ச்சி செய்யாமல் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் (கடக லக்னம் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதன் ஐந்தில் சூரியனுடன் இணைந்திருப்பது நல்ல நிலையே.

நீங்கள் செய்து வரும் சுயதொழில் என்பது மிகச் சரியாக அமைந்திருக்கிறது. ஜீவனஸ்தானஅதிபதி குரு 9ல் அமர்ந்திருப்பதால் சம்பாத்தியம் என்பது சீராகவே இருந்து வரும். திருமணத்திற்குப் பிறகு உங்களுடைய தொழில் நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே வெஜிடேரியன் ஆகவும், நல்ல குணவான் ஆகவும் கணவர் அமைவார். மனமொத்த கணவராகவேஅமைவார். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் திருமணத்திற்கு வரன் தேடுங்கள். தற்போது திருமண யோகம் என்பது வந்துவிட்டது.

கால நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக வரன் பார்க்கத் துவங்குங்கள். உங்களுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின் அடிப்படையில் உங்கள் மனதினை நன்றாகப் புரிந்து கொள்பவராகவும், உங்கள் வாழ்க்கையின் லட்சியத்திற்கு உறுதுணையாய் இருப்பவராகவும் கணவர் அமைவார். கவலை வேண்டாம். வியாழக்கிழமை நாளில் திருப்பரங்குன்றம் சென்று சுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிறப்பு பரிகாரம் ஏதும் அவசியமில்லை. மணவாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையும்.

எனது மகள் வங்கிப் பணிக்கான தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? எந்த வயதில் திருமணம் செய்யலாம்? திருமண வாழ்க்கை மற்றும் எதிர்காலம் எப்படி உள்ளது? - பிரபாவதி, சென்னை.

உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில், அமாவாசை நாளில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. உங்கள் மகள் அமாவாசை நாளில் பிறந்திருப்பதாலும், ஜென்ம லக்னத்திலேயே சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பதாலும் முன்னோர் வழிபாட்டினை வீட்டினில் தவறாமல் செய்து வாருங்கள். வீட்டில் செய்யவேண்டிய சிராத்தம் முதலான பித்ரு கர்மாக்களை எந்தவிதமான சாக்குபோக்கும் சொல்லாமல் தவறாமல் செய்து வர வேண்டியது அவசியம்.

முன்னோர்களின் ஆசி இருந்தால்தான் வாழ்க்கை என்பது நல்லபடியாக அமையும். அவருடைய ஜாதக கணிதத்தின்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தியின் காலம் நடந்துவருகிறது. அவர் ஜாதகத்தில் உத்யோக ஸ்தான அதிபதி சனி 11இல் அமர்ந்திருப்பதும், உத்யோக ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும் உள்ளூரில் உத்யோகத்தைத் தராது. அந்நிய தேசப்பணி என்பது அவருக்கு கைகொடுக்கும். திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் நான்கில் ராகுவுடன் இணைந்து அமர்ந்திருக்கிறார். இது உறவு முறையில் வாழ்க்கைத் துணைவரைத் தேடித் தரும்.

உங்கள் உறவுமுறையில் அந்நிய தேசப்பணியில் இருந்து வருபவராக அவரைப் பெண் கேட்டு வருவார்கள். தயங்காமல் அந்தப் பிள்ளைக்கே உங்கள் மகளை மணம் முடித்து வையுங்கள். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் உங்கள் மகளுக்கு வெளிநாட்டிலேயே உத்யோகம் என்பதும் கிடைத்து விடும். அதற்காக திருமணம் நடக்கும் வரை உத்யோகத்திற்குச் செல்லாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அரசுப் பணிக்காகக் காத்திருக்காமல் இவரது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களிலும் வேலை தேடச் சொல்லுங்கள். தற்போதைய தசா புக்தியின் காலம் உத்யோகம் பார்ப்பதற்கு துணை செய்வதால் உடனடியாக உத்யோகம் என்பது கிடைத்துவிடும்.

25வது வயதில் மணமகன் வீட்டார் தேடிவந்து பெண் கேட்கும்போது இவரது திருமணம் எந்த விதமான தடையும் இன்றி நடந்தேறும். அரசுப் பணி அல்லது வங்கி சார்ந்த பணிதான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை விடுத்து கிடைக்கும் உத்யோகத்திற்குச் செல்வது நல்லது. முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடன்களை சரிவர செய்து வாருங்கள். உங்கள் மகளின் திருமண வாழ்வும், எதிர்காலமும் சிறப்பாகவே அமையும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்