தயக்கம் விலகும்!

1. நான் பிறந்தது முதல் கஷ்டம்தான். பிறந்து 30 நாட்களுக்குள் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. 31 வயதாகியும் சம்பளத்திற்குத்தான் வேலை பார்க்கிறேன். சுயதொழில் முயற்சி செய்து நிறைய கடனாகிவிட்டது. என்னால் என் தாய் கஷ்டப்படுவதை பார்க்க சகிக்கவில்லை. அண்ணன் வீட்டை விட்டுப் போய் மூன்று வருடம் ஆகிறது. எங்கள் குடும்பம் நல்லபடியாக வாழ ஒரு வழி சொல்லுங்கள். காளீஸ்வரன், மதுரை.

நடப்பது எல்லாம் என்னால்தான் நடக்கிறது என்று எண்ணுவதே உங்கள் பிரச்னை. எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் உங்கள் பிரச்னை தன்னால் சரியாகிவிடும். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தின்படி லக்னாதிபதி புதனும், தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனியும் வக்ரம் பெற்றிருப்பதால் எல்லா விஷயத்திலும் தைரியக் குறைவு உண்டாகி இருக்கிறது. தயக்கமே உங்கள் வளர்ச்சியின் எதிரி.

தயக்கம் விலகினால் வெற்றி நிச்சயம். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதும், ஸ்தான அதிபதி புதன் ஒன்பதில் இருப்பதும் நல்ல நிலையே. நீங்கள் சுயதொழிலில் ஈடுபட இயலும். அதிகம் கடன் வாங்காமல் சிறிய அளவில் பெட்டிக்கடை போன்று உங்கள் வியாபாரத்தைத் துவக்குங்கள். கால நேரத்தை தள்ளிப்போடாமல் மனப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுச் சென்ற அண்ணனைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். ஞாயிறு தோறும் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்விற்கான வழி திறக்கும்.

30 வயதாகும் எனக்கு வாழ்வின் லட்சியம் அரசுப் பணியில் அமர்வது. வெற்றியை அடைய என் மனம் ஏங்குகிறது, போராடுகிறது. ஆனால் ஏதோவொன்று என்னைத் தடுப்பது போல் உணர்கிறேன். என்னைப் பார்த்து என் பெற்றோர் வேதனைப்படுகின்றனர். நான் அவர்களைப் பார்த்து வேதனைப் படுகிறேன். அடியேனுக்கு நம்பிக்கையும், தைரியமும் வர பரிகாரம் சொல்லுங்கள். ஸ்ரீதர், திருச்சுழி.

உங்களை நீங்களே நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனாலும், உங்களுடைய பலவீனத்தில் இருந்து வெளியே வர மறுக்கிறீர்கள். உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுடைய ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் சுக்கிரனின் அமர்வும், லக்னாதிபதி புதன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதும் உங்களை சுகவாசியாக அமரச் செய்துள்ளது. உத்யோக ஸ்தானத்தில் செவ்வாயின் அமர்வு அரசுப் பணியைத் தந்தாலும், ஸ்தான அதிபதி குரு 12ல் உள்ளதால் உள்ளூரில் வேலை கிடைப்பது அரிது. வடஇந்திய மாநிலங்கள் போன்று தொலைதூரத்தில் உங்கள் உத்யோகம் அமையும். மத்திய அரசுப்பணிக்கான தேர்வுகள் அனைத்தையும் தவறாது எழுதி வாருங்கள்.

உங்கள் வயதினையும் கணக்கில் கொண்டு பணிக்கு முயற்சியுங்கள். ஜாதகத்தில் அரசுப் பணிக்கான யோகம் இருக்கிறது என்பதற்காக அது கிடைக்கும் வரை வீட்டிலேயே அமர்ந்திருப்பது முறையல்லவே. பகவத்கீதை உரைப்பது போல் இயங்கிக் கொண்டிருந்தால்தான் பலன் கிட்டும். திருச்சுழியில் வசிக்கும் நீங்கள் ஒருமுறை திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் சென்று வணங்கியபின் நாகாபரணத்துடன் அருள்பாலிக்கும் அருணாச்சலேஸ்வரரையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் பெறுவதோடு உங்கள் வெற்றிக்கான பாதையையும் காண்பீர்கள்.

27 வயதாகும் என் தங்கைக்கு திருமணம் தள்ளிப் போகிறது. கல்யாண திசைதான் நடக்கிறது என்றாலும் வயிற்று வலியாலும், முகத்தில் ஏற்படும் சிறுசிறு கொப்புளத்தாலும் அவதிப்படுகிறாள். இதனால் பெற்றோர் மீது மிகுந்த கோபமாகவும், அவர்களை அடிக்கவும் செய்கிறாள். அவளுக்கு ஏதேனும் மனநலக் குறைபாடு உள்ளதா? விரைவில் திருமணம் நடக்க ஒரு பரிகாரம் கூறுங்கள். விஜயலட்சுமி, சிவகாசி.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கையின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின்படி கோபம் என்பது அதிகமாக வருமே தவிர மனநலக் கோளாறு என்பது இல்லை. அவர் மன விருப்பம் நிறைவேறாத பட்சத்தில் அது தனக்கு மிகவும் உரிமையானவர்கள் மீது கோபமாக வெளிப்படுகிறது. அவ்வளவுதான். அதே போல அவரது உடல்வாகு உஷ்ணத்தன்மை கொண்டது. உடல் சூட்டினைத் தணிக்கும் விதமான உணவு வகைகளை உட்கொள்வது நல்லது.

ஆகாரத்தில் பசுநெய், நல்லெண்ணெய், நீர்மோர் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காண இயலும். திருமண வாழ்வினைப் பொறுத்தவரை அவரது ஜாதகத்தில் களத்ர ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் திருமணம் தாமதமாகி வருகிறது. என்றாலும் சனியின் ஆட்சி பலமும், குரு பகவானின் பார்வையும் நல்ல கணவனை அமைத்துத் தரும். சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். 29.08.2019ற்குள் திருமணம் முடிவாகிவிடும்.

“விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரினே ருக்மிணீ ராகிணே ஜானகீ ஜானயே  

 ஸ்ரீ தரம் மாதவம் கோபிகா வல்லபம் ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே,”

என் மகள் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் சீட் கிடைக்கவில்லை. சென்னையில் நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது பெங்களூரில் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வருகிறாள். அவள் மனதளவில் மிகவும் பயப்படுகிறாள். அவளது எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேற உரிய பரிகாரம் கூறுங்கள். மோகன்ராஜ், குடியாத்தம்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி (ரிஷப ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. இந்த நேரம் உடலில் உஷ்ண உபாதையைத் தருவதோடு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் தரும். அவர் சாப்பிடும் உணவினில் அதிக கவனம் தேவை. ஜென்மலக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது மனோ தைரியத்தைக் குறைப்பதோடு அவ்வப்போது விரக்தியான மனநிலையையும் தந்து கொண்டிருக்கிறார். 23.01.2019ற்குப் பிறகு ஹாஸ்டல் போன்ற இடங்களில் அவரைத் தனியாக தங்க வைப்பது நல்லதல்ல.

மகளின் கனவினை நனவாக்கப் போராடும் நீங்கள், அவர் படித்து வரும் ஊரிலேயே தகுந்த துணையுடன் தனியாக ஒரு வீடு பார்த்து தங்க வைப்பது நல்லது. வீட்டுச் சாப்பாடும், துணைக்கு ஒரு நபர் அவருடன் இருப்பதும் அவரது மனோ தைரியத்தை பலப்படுத்தும். உண்மையில் நீட் தேர்வு நடக்கவிருக்கும் நேரத்தில் உங்கள் மகளின் ஜாதக நிலை அத்தனை பலமாக இல்லை என்றாலும், உங்கள் நம்பிக்கையும், பிரார்த்தனையும் அவருக்கு பக்கபலமாகத் துணைநிற்கும். திங்கட்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். கனவு மெய்ப்படும்.

“ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம்

 அநேக க்ரியா யோக சக்தி ஸ்வரூபம் ஸதாவிச்வரூபம் கணேசம் நமாமி,”

எனக்கும் எனது தம்பிக்கும் சுமுக உறவு இல்லாமல் இருக்கிறது. நான் எத்தனை நன்மை செய்தாலும் என்மேல் பகைமை பாராட்டுகிறான். 2006ல் இருந்து இந்த பிரச்னை உள்ளது. தாய் வீட்டுச் சொத்தினை விற்று மொத்த பணத்தையும் அவனுக்கே கொடுத்தும் பகை கொண்டிருக்கிறான். உறவினர்களின் சொல்பேச்சு கேட்டு அவ்வாறு நடந்து கொள்கிறான். இந்நிலை எப்போது மாறும்? நல்லுறவு உண்டாக என்ன செய்ய வேண்டும்? சந்தான லட்சுமி, சென்னை.

வெளிநாட்டில் பிறந்திருக்கும் உங்கள் இருவரின் ஜாதகத்தையும் அந்த நாட்டு கணக்கின்படி சரியாக கணித்து வைத்துக் கொள்ளுங்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தம்பியின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் செவ்வாய் புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அறுபத்திமூன்று வயதிலும் சகோதர பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். உங்கள் இருவரின் ஜாதகக் கணக்கின்படி உங்கள் சகோதரருடன் நல்லுறவு உண்டாக இன்னும் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும்.

வெளியில் உங்களுடன் பகை கொண்டிருப்பது போல் தோன்றினாலும் மனதிற்குள் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறார் உங்கள் தம்பி. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இடையில் உள்ளவர்களால் உண்டான கலகம் பிரிவினைத் தந்திருக்கிறது. 2020ம் ஆண்டு ஜனவரியின் இறுதியில் நடக்கும் ஒரு சம்பவம் உங்கள் இருவரையும் ஒன்றிணைக்கும். மற்றுமொரு சொத்தினை அதன்பிறகு விற்றுக் கொள்ளலாம். வீட்டில் உள்ளங்கை அளவிற்கு ஒரு சிறிய விநாயகர் சிலையை வாங்கி அதனருகில் ஒரு சிறிய வேல் வைத்து வழிபட்டு வாருங்கள். உடன்பிறப்புடன் நல்லுறவு உண்டாகும்.

எனது மகளுக்குத் திருமணம் முடிந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்தாகிவிட்டது. எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வருகிறார்கள். எங்களுக்கு பேரக்குழந்தை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள். மோகன், மயிலாடுதுறை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டின் அதிபதி குரு பகவான் உச்சம் பெற்றிருந்தாலும் கேதுவுடன் இணைந்திருக்கிறார். விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் உடன் கேது இணைந்திருக்கிறார்.

இருவருடைய ஜாதகத்தின்படியும் புத்திர ஸ்தான அதிபதியுடன் கேது இணைந்திருப்பதால் பிள்ளைப்பேறு கிடைப்பதில் தாமதம் உண்டாகி வருகிறது. திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள விநாயகப்பெருமானுக்கு தும்பைப்பூ மாலை சாற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். வருகின்ற தை மாதம் வரவுள்ள சோமவார அமாவாசை (04.02.2019) நாளன்று உங்கள் மகளை நதிக்கரையில் அமைந்துள்ள அரசமரத்தடி நாகருக்கும், விநாயகருக்கும் பால் அபிஷேகம் செய்வதுடன் நதியில் ஸ்நானம் செய்து ஈர வஸ்திரத்துடன் தம்பதியராக அரசமரத்தினை 16முறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். விநாயகப் பெருமானின் திருவருளால் வருகின்ற வைகாசி மாதத்திற்குள் வம்சம் விருத்தி அடையக் காண்பீர்கள்.

29 வயதாகும் என் மகளுக்கு கடந்த மூன்று வருடங்களாக வரன் பார்த்து வருகிறேன். எந்த வரனும் கைகூடி வரவில்லை. மனதாலும் உடலாலும் நிம்மதி இன்றி தவிக்கிறேன். எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உரிய பரிகாரம் கூறுங்கள். மணியன், தூத்துக்குடி.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஆறில் அமர்ந்துள்ளார். ஏழில் வக்ரம் பெற்றுள்ள புதன் அமர்ந்திருப்பதும் திருமணத்தடையை உண்டாக்கி வருகிறது. என்றாலும் உடன் இணைந்திருக்கும் குரு பகவான் ஒரு நல்ல மனிதரை கணவராக அமைத்துத் தருவார். அமாவாசை நாளில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது திருமண யோகம் கூடிவரவில்லை. இருபத்திஐந்து முதல் இருபத்தி ஆறு வயதிற்குள் வந்த திருமண யோகத்திற்கான வாய்ப்பினை தவறவிட்டதால் தற்போது தாமதமாகி வருகிறது.

அவருடைய ஜாதகப்படி இதற்கு மேற்பட்டு 31வயது முடிந்து 32வது வயதில் மீண்டும் திருமண யோக வாய்ப்பு வருகிறது. பிரதி அமாவாசை தோறும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான தம்பதியருக்கு உங்கள் மகளின் கரங்களால் அன்னதானம் செய்து வரச் சொல்லுங்கள். வயதான தம்பதியருக்கு புதிய வஸ்திரம் வாங்கித் தருதலும் நல்லது. ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் குரு ஸ்தலம் ஆகிய திருச்செந்தூருக்குச் சென்று செந்தில் ஆண்டவரை தரிசித்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். திருமணம் முடிந்த கையோடு தம்பதியராக வந்து தரிசிப்பதாக உங்கள் மகளின் பிரார்த்தனை அமையட்டும். 2020ம் ஆண்டின் பிற்பாதியில் குருவின் திருவருளால் தனது மனதிற்கு பிடித்த மணாளனாக அமையக் காண்பார்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: