×

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை: கலியுக வைகுண்டமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்த பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவர்கள் சொர்க்கவாசலில் எழுந்தருளினர். தொடர்ந்து கோயில் ஜீயர்கள் முன்னிலையில் ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷிதலு தலைமையில் உற்சவ மூர்த்திகளுக்கு சொர்க்கவாசலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கவர்னர் நரசிம்மன், ஆந்திர மாநில துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மனைவி ஷோபா ராவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக தரிசித்தனர். தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகளவிலான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். மேலும் மார்கழி மாதம் தொடங்கியதால் மலையில் குளிருடன் கூடிய காற்று வீசி வருகிறது. எனவே, சுவாமி தரிசனத்திற்காக வந்த மூத்தகுடிமக்கள், கைக்குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகளில் 4.75 கோடியில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய தற்காலிக நிழற்பந்தல்களை ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணி முதல் நிழற்பந்தல்களில் தங்க வைக்கப்பட்ட பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக திருப்பதி திருமலை இடையே 24 மணி நேரமும் வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து நாளை துவாதசியையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பூஜைகளுக்கான நேரத்தை தவிர பக்தர்கள் தொடர்ந்து 44 மணிநேரம் இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Tags : Munnapathai Swamy Parvathi ,Vaikuntha Ekadasi ,
× RELATED சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு