கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி

கோவில்பட்டி: கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று புஷ்பாஞ்சலி நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல்  முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா  கடந்த 8ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மூலவர் கதிர்வேல்முருகனுக்கு சிறப்பு  அபிஷேக  லட்சார்ச்சனை நடந்தது. மேலும் கார்த்திகேயர், வள்ளி  தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.   

நேற்று முன்தினம் (14ம் தேதி) திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. விழாவின்  நிறைவு நாளான நேற்று (15ம் தேதி) காலை கார்த்திகேயர், வள்ளி, தெய்வானைக்கு  சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு ஊஞ்சல்  உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலியும், சாந்தாபிஷேகமும் நடந்தது. பூஜைகளை ஹரிஹரன், சுப்பிரமணியன், அரவிந்த் பட்டர் முன்னின்று நடத்தினர்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல், லட்சுமியம்மாள்  பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல்  கல்லூரி முதல்வர் கண்ணப்பன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கட்டளைதாரரான கோவில்பட்டி கே.ஆர்.நகர் நேஷனல் பொறியியல்  கல்லூரி ராமசாமி சென்னம்மாள் செய்திருந்தனர்.

Related Stories: