காலையிலேயே மாயூரநாதர், வதானேஸ்வரர் சுவாமி கோயில்களில் துலா உற்சவ தேரோட்டம்

மயிலாடுதுறை: கஜா புயல் எச்சரிக்கயால் மாலையில் நடக்க வேண்டிய மாயூரநாதர், வதான்யேஸ்வரர் சுவாமி கோயில்களில் துலா உற்சவ தேரோட்டம்

நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18ம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ம் தேதி திருக்கல்யாணமும் அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. வழக்கம்போல் மாலை நேரத்தில்  நடத்தப்படும் தேரோட்டமானது கஜா புயல் எச்சரிகையை அடுத்து நேற்று காலையிலேயே இந்த தேரோட்டம் நடைபெற்றது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று தருமபுரம் ஆதினத்திற்கு செந்தமான வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்திழுத்தனர். முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (16ம் தேதி) மதியம் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.

Related Stories: