திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனித்துவமிக்க கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் கடந்த 13ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் தவசுக்கு புறப்பட்டு, தெப்பக்குளத் தெருவில் உள்ள தபசு மண்டபத்தை வந்தடைந்ததும், பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.