திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான்  தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனித்துவமிக்க கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் கடந்த 13ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் தவசுக்கு புறப்பட்டு, தெப்பக்குளத் தெருவில் உள்ள தபசு மண்டபத்தை வந்தடைந்ததும், பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

மாலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் தபசு மண்டபத்தில் தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தெற்கு ரதவீதி  மேல ரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாளுக்கு தோள்மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்பாளும் திருக்கோயில் வந்து சேர்ந்தனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு கிழக்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கல்யாண வைபவம் நடைபெற்றது. காப்பு கட்டுதல், மாலை மாற்றுதலைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. விழாவில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள், திருக்கல்யாண வைபவத்துக்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

Related Stories: