கூமாப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டியில் முத்தாலம்மான் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தன்ர். வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நற்பணி மன்றம் சார்பில், 27ம் ஆண்டு முத்தாலம்மன் பொங்கல் திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கியது. அன்று முதல் 13ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேரோட்டத்தையொட்டி நேற்று காலை 6.20 மணிக்கு முத்தாலம்மன் தேரில் பவனி வந்தார். அப்போது ஆடு, சேவல்களை பலியிட்டு, பெண்கள் மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பகல் 11.50 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தது. பின்னர், சாமி தரிசனத்திற்காக முத்தாலம்மன் கோயிலில் வைக்கப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் பிரியாவிடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, எஸ்ஐ ராஜசேகரன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கருப்பையா, பொருளாளர் சுந்தரமகாலிங்கம், உதவித்தலைவர் அழகர்சாமி, உதவிச்செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: