அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா : வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனி

திருவண்ணாமலை: .திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் வாண வேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர்.

அதைத்தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை மாட வீதியில் திரண்டிருந்து பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

Related Stories: