திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது. 15வது நூற்றாண்டு முதல் ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வந்த புஷ்ப யாகம் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி முதல் மீண்டும் ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகத்தை தொடங்கினார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதத்தில் சிராவன (திருவோண) நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் புஷ்ப யாகத்திற்கான மலர்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் காலை 9 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி,  துளசி, மருதம் உட்பட 18 ரகமான 9 டன் மலர்களை கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க புஷ்பயாகம் நடத்தப்பட்டது. உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் கீழ் இருந்து சுவாமியின் நெஞ்சு வரை புஷ்ப யாகம் நடத்தபட்டு அவை அனைத்தும் கலைக்கப்பட்டது. பின்னர் இதேபோல் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள்  20 முறை புஷ்ப யாகம் நடத்தினர். இதில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், தோட்டத்துறை கண்காணிப்பாளர்   சீனிவாசலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.  வருடாந்திர புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய சுப்ரபாதம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து  ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

Related Stories: