திருமணம் நிச்சயமாகும்

எனக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வருகிறார்கள். ஆனால், எனக்கு இதில் விருப்பமில்லை. கண்டிப்பாக வேலை பார்த்தாக வேண்டிய சூழலில் உள்ளேன். அரசாங்க வேலைக்கு முயற்சித்து வருகிறேன். வேலையா, திருமணமா எது முதலில் நடக்கும்? வேலை கிடைக்க பரிகாரம் கூறுங்கள். சுதா, ஓமலூர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சுக்கிர புக்தி நடந்துவருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன், மீனத்தில் அதாவது குரு பகவானின் வீட்டில் அமர்ந்திருப்பதும், குரு பகவான் ஏழில் பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்திருப்பதும் நல்லநிலையே. உங்கள் ஜாதகபலத்தின்படி திருமண வாழ்வு என்பது நல்லபடியாக அமையும். உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் நிரந்தர உத்யோகம் என்பதும் கிடைக்கும் என்றாலும், தற்போது நடந்து வரும் தசா புக்தியின் காலம் திருமண யோகத்தினையே தருகிறது.

ஒருபுறம் வேலைக்கு முயற்சி செய்தாலும் திருமணத்திற்கு மறுப்பு சொல்லாதீர்கள். உங்களுக்கு வரும் கணவர் உங்கள் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக துணை நிற்பார். அநாவசியமாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நல்ல நேரத்தினை பயன்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் தனஸ்தானமும், லாபஸ்தானமும் வலிமையாக இருப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்காலத்தில் எந்த குறையும் உண்டாகாது. செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்குவதுடன் நல்வாழ்வும் அமையக் காண்பீர்கள்.

ஆயுள் தண்டனை பெற்று கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருந்து வருகிறேன். காதல் திருமணம் செய்துகொண்ட என்னை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாதம் இருமுறை என் மகளை எடுத்து வந்து காட்டிவிட்டுப் போகும் என் மனைவி கடந்த நான்கு மாதங்களாக என்னைப் பார்க்க வரவில்லை. என்ன ஆனது என்று ஒரு விவரமும் தெரியவில்லை. என் மனக்கவலையைப் போக்க பரிகாரம் கூறுங்கள். மணிகண்டன், கோவை மத்தியசிறை.

நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் உங்களுடைய பிறந்த தேதி, நேரம் பற்றிய விவரத்தையும், உங்கள் மனைவியின் ஜனன விவரத்தையும் பற்றி குறிப்பிடவில்லை. மனைவியின் நிலையைப் பற்றி அறிய அவரது ஜாதக விவரம் தேவை. உங்கள் மகளின் பிறந்த தேதி, நேரத்தினைக் குறிப்பிட்டுள்ளீர்கள். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தாய், தந்தையைப் பற்றிச் சொல்லும் நான்கு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெற்றோரை விட்டு தனித்து வாழும் நிலைக்கு ஆளாகியுள்ளார் என்றாலும், தாயின் கண்காணிப்பில் வளர்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய ஜாதகபலத்தின்படி தன்னுடைய ஐந்தாவது வயது முதல் நல்லபடியாக வாழ்வார். 12வது வயது முதல் தன்னுடைய தந்தையுடன் இணைந்து வாழ்வார். ஜென்ம லக்னத்தில் செவ்வாயின் அமர்வினைப் பெற்றிருக்கும் அவர் வீரம் மிகுந்த பெண்ணாக வளர்வார். எதிர்காலத்தில் அவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பும் உண்டு. சிறையில் உங்களுடன் இருக்கும் வயது முதிர்ந்த உடல்நலம் குன்றிய கைதிகளுக்கு உங்களால் இயன்ற பணிவிடைகளைச் செய்து வாருங்கள். அவர்களுடைய ஆசிர்வாதம் உங்கள் மகளை நல்லபடியாக வாழ வைக்கும்.

பார்வையற்றோர் பள்ளியில் படித்து அப்பா, அண்ணன் உதவியோடு எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்., படித்திருக்கிறேன். கடும் முயற்சிக்குப் பின் கடைநிலை ஊழியராக அரசுத்துறையில் பணி செய்கிறேன். மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மூலம் நல்ல கணவர் கிடைத்திருக்கிறார். ஐந்து வருடங்களாகியும் புத்திர பாக்யம் கிடைக்கவில்லை. பிள்ளைப்பேறு, ஆசிரியர் பணி, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து ஆகியவை கிடைக்க பரிகாரம் கூறுங்கள். ராஜலட்சுமி ஏழுமலை, மதுரை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவனஸ்தான அதிபதி சூரியன் எட்டில் அமர்ந்திருப்பதால் படிப்பிற்குத் தகுந்த உத்யோகம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றாலும், வருகின்ற 2019ம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் துவங்க உள்ள சூரிய தசை உங்கள் உத்தியோகத்தை உயர்த்தும். நெட், ஸ்லெட் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி வாருங்கள். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருவதும் நல்லது.

புத்திர பாக்கியத்தைத் தரும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவானுடன் சனி இணைந்திருப்பதும், உங்கள் கணவரின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும் பிள்ளைப் பேறினை தாமதமாக்கி வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாளில் அருகிலுள்ள அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். அமாவாசை நாளில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்யுங்கள். மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பில் இணைந்து விடுமுறை நாட்களில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியைப் புகட்டும் சேவையைச் செய்து வாருங்கள். பின்வரும் துதியினைச் சொல்லி தினமும் மனதிற்குள் மீனாட்சியை வணங்கி வர பெயருக்கு ஏற்றார்போல் ராஜலட்சுமியாக வாழ்வீர்கள்.

“ஸ்ரீமத் ஷண்முக விக்நராஜஜனநீம் ஸ்ரீமஜ்ஜகன் மோஹிநீம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மிஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்”

கைத்தறி கூலி வேலை செய்து வரும் என் கணவர் கடந்த இரு மாதமாக தொழிலைச் செய்யவில்லை. வீட்டிற்கும் சரியாக வருவதில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள அவரைஅதிலிருந்து மீட்டு வருவதற்கும், கூலிக்குத் துண்டு வாங்கி முடியும் தொழிலை நான்  தொடர்ந்து செய்யலாமா அல்லது வேறு தொழிலை மாற்ற வேண்டுமா என்பதற்கும் உரியவழி சொல்லுங்கள். ஹேமலதா, கொமாரபாளையம்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றில் உச்சம் பெற்றிருப்பதால் தையல் வேலையை நீங்கள் செய்யலாம். அதோடு எம்பிராய்டரி போன்ற அலங்கார வேலைகளும் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் என்றாலும், தற்போது நடந்து வரும் தசா புக்தியின் காலத்தில் அதிக முதலீடு செய்ய இயலாது என்பதால் தற்போது செய்துவரும் தொழிலையே தொடர்ந்து செய்து வாருங்கள். இன்னும் சில காலம் கழித்து உங்கள் கணவரின் சம்மதத்துடன் தையல் வேலையைத் துவங்கலாம்.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. நெசவுத் தொழிலில் மிகவும் திறமையானவர். அவரை நல்வழிப்படுத்துவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது. அவருடைய திறமைக்கும், உழைப்பிற்கும் பெரிய முதலாளியாக உருவெடுக்க இயலும். மற்றவர்களால் செய்ய முடியாத செயலைச் செய்து முடிக்கும் அசாத்திய ஆற்றல் அவருக்கு உண்டு. இந்த உண்மையை அவருக்குப் புரிய வைக்க முயற்சியுங்கள். 2019ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவருடைய நடத்தையில் மாற்றத்தை உண்டாக்கும். அதுவரை பொறுமையாய் இருங்கள். மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்குங்கள். வாழ்வுநிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

என் பேத்தி சமீபத்தில் புஷ்பவதி ஆனார்.அதை முன்னிட்டு ஜோதிடரிடம் விவரம் கேட்டேன். அதற்கு அவர் அன்றையதினம் ஆவணி மூலம் இருக்கிறது. அது நல்லதல்ல, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார். மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. உரிய பரிகாரம் சொல்லுங்கள். சேட்டு, வாலாஜா.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் பிறந்த ஜாதகம் என்பது நன்றாக உள்ளது. புஷ்பவதி ஆனநாள் மற்றும் நேரத்தினையும் குறிப்பிட்டுள்ளீர்கள். ருது ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் அதுவும் நன்றாகவே உள்ளது. நீங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மூலம் நட்சத்திரத்தில் ருதுவானதால் எந்தவிதமான தோஷமும் அண்டாது. கிழமையை வைத்து ஒரு சிலர் செவ்வாய்க்கிழமையில் பெரியவள் ஆனதால் செவ்வாய் தோஷம் வந்து சேரும் என்று சொல்வார்கள். அந்தக் கூற்றிலும் உண்மை இல்லை.

உங்கள் பேத்தியின் ஜாதகம் வலுவாக உள்ளதால் அவரது திருமணவாழ்வும், புத்திரபாக்கியமும், எதிர்கால வளர்ச்சியும் அவரது மனதிற்கு பிடித்தமான வகையிலேயே அமையும். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நன்றாக படிக்க வையுங்கள். உயர்கல்வியை வெற்றிகரமாக படித்து முடிக்கும் உங்கள் பேத்தி உயர்ந்த உத்தியோகத்தை அடைவார். உயர்பதவி வகிப்பதோடு உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்ப்பார். எந்தவிதமான பரிகாரமும் தேவையில்லை. கவலையை மறந்து பேத்தியுடன் கொஞ்சி விளையாடுங்கள். அதுவே அவரது வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.

என் மகனை இந்த வருடம் கல்லூரியில் சேர்த்துள்ளேன். வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே கல்லூரிக்கு வருவதாக புகார் வருகிறது. ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் எனக்கு வசதி வாய்ப்பு குறைவு. பிள்ளையால் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என்று ஆசையாய் இருந்தேன். வயதுப் பையனை கண்டித்தால் ஏதேனும் தவறாகி விடுமோ என்ற பயம் இருக்கிறது. உரிய பரிகாரம் சொல்லுங்கள். கார்த்திகேயன், சென்னை.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ப்ரிகேஜி முதல் 12ம் வகுப்பு வரை மொத்தம் 15 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் நுழைந்திருக்கும் உங்கள் மகனின் இடத்திலிருந்து அவரது மனநிலையை எண்ணிப் பாருங்கள். இத்தனை நாள் ஏதோ ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாகவும் தற்போது சுதந்திரமாக சிறகடித்துப் பறப்பதாகவும் எண்ணியிருக்கும் வயது அது. இன்னும் சில நாட்களில் தானாக சரியாகிவிடும்.

உங்கள் மகனின் ஜாதகத்தைப் பொறுத்தவரை கல்வியைக் குறிக்கும் நான்காம் வீட்டில் புதன், குருவோடு சனியும் இணைந்திருக்கிறார். தற்போது சனி புக்தி நடப்பதால் படிப்பில் சற்று கவனம் குறைகிறது. 20 வயது முடிந்து 21வது வயது துவங்கும்போது உங்கள் மகனின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் விதமாக எதிர்காலத்தில் உயர்ந்த பதவியில் அமர்ந்து உங்களைப் பெருமைப்படுத்துவார். தவறான நண்பர்களுடன் இணையாமல் கண்காணித்து வந்தால் போதுமானது. அவரை அதிகம் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. கல்லூரிக்குச் செல்வதற்கு முன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டு செல்லும்படி சொல்லுங்கள். உங்கள் உழைப்பும் முயற்சியும் நிச்சயமாக உங்கள் மகனை உயர்த்திக் காட்டும்.

57 வயதாகும் நான் அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணி செய்கிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய இரண்டு பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை. 24 வயதாகும் என் மகளின் திருமணம் தாமதமாகிறது. புதிதாக கட்டிய வீட்டில் வெடிப்பு உண்டாகி பொறியாளர் மூலம் சரிசெய்தும் தற்போது மீண்டும் வெடிப்புகள் உண்டாகிறது.என் வேதனை தீர வழிகாட்டுங்கள். முத்துக்குமார், திருச்சி.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஏழரைச் சனி நடந்து வருவதும், ஜனன ஜாதகத்தில் விரயஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் சனி கேது இணைந்திருப்பதும், தனஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாய் நீசம் பெற்றிருப்பதும் உங்கள் வளர்ச்சியைத் தடை செய்வதோடு, மன உளைச்சலையும் தந்து கொண்டிருக்கிறது. உத்யோகரீதியாக நமக்கும் கீழே உள்ளவர்களின் நிலையினைக் கண்டு மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். தற்போதைய கிரஹநிலை சாதாரணமாக இருந்தாலும் நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் காலத்திற்குள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், சம்பள உயர்வும் அதற்கேற்றார் போல் பணி முதிர்வு தொகைகளும் சிறப்பான முறையிலேயே கிடைக்கும்.

அதனை நினைத்து வீணாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு ஆறாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நல்ல சம்பந்தங்கள் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. உங்கள் மகளை வியாழக்கிழமைதோறும் விரதம் இருந்து நவகிரஹ குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். தொடர்ந்து 16 வாரங்கள் செய்வது உத்தமம். 16வது வாரம் முடிவதற்குள் (நான்கு மாத காலத்திற்குள்) அவரது திருமணம் நிச்சயமாகி விடும். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: