உழைப்பு உயர்வு தரும்!

48 வயதாகும் என் மகன் மருந்து வியாபாரம் செய்து நஷ்டம் அடைந்துவிட்டான்.வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை வசூல் செய்ய முடியவில்லை. மிகவும் கஷ்டத்தில் உள்ள என் மகனுக்கு நல்லதொரு பரிகாரம் சொல்லி காப்பாற்றித் தாருங்கள். குப்புரத்தினம் அம்மாள், ஈரோடு.

உத்திராடம் நட்சத்திரம், மகரராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி மூன்றில் நீசம் பெற்றிருப்பதோடு வக்ர கதியிலும் சஞ்சரிக்கிறார். ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும், ஜீவனஸ்தான அதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்தும் தொழில் முறையில் துணை செய்கிறார்கள். தான் உண்டு, தனது தொழில் உண்டு என்று இருக்காமல் பேராசையால் உங்கள் மகன் செய்திருக்கும் ஒரு சில செயல்கள் அவரை இவ்வாறு பாடாய்ப்படுத்துகிறது. நண்பர்களையும், சுற்றியுள்ளவர்களையும் நம்பி அவர் இறங்கிய முயற்சியில் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்.

என்றாலும் தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் நல்ல நேரம் என்பது துவங்கியுள்ளதால் இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு தனது தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். சொந்தமாக முதலீடு செய்து தொழில் செய்ய இயலாவிடினும் இதே துறையில் உள்ள யாரிடமாவது பணியாற்றச் சொல்லுங்கள். 06.07.2019க்குள் வெளியில் நிலுவையிலுள்ள பணம் ஓரளவிற்கு வசூலாகிவிடும். இனிமேலாவது தனது உத்யோகத்தில் மட்டும் அவர் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து வருவதோடு சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று ஆறுமுறை வலம் வந்து வணங்கி வருவதால் தன் முயற்சியில் வெற்றி காண்பார்.

என் தங்கைக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறாள். குழந்தை இல்லை. அவளது கணவர் நகைகள் அனைத்தையும் வாங்கி செலவழித்து விட்டார். கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். என் தங்கைக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் புத்ர பாக்யத்திற்கும் வழி சொல்லுங்கள். நிர்மலா, புதுப்பேட்டை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்தங்கையின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது கணவரின் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் தங்கையின் ஜாதக பலத்தின்படி அவருடைய ஜீவன ஸ்தானம் என்பது மிகவும் பலம் பொருந்தியதாக உள்ளது. தற்போது தாய்வீட்டில் இருந்துகொண்டு வேலைக்குச் சென்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் வேலைக்குச் செல்வதைவிட சொந்தமாக சுயதொழில் செய்ய இயலும். அவர் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கும் டைலரிங்கலை அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

எம்பிராய்டரி, டிசைனிங் ஒர்க் போன்றவை அவருக்கு கைகொடுக்கும். சிறு முதலீட்டுடன் சொந்தமாகக் கடைவைக்க அவருக்கு துணை நில்லுங்கள். தற்போது நடக்கின்ற நேரம் அவரை தொழில் முறையில் சொந்தக் காலில் நிற்க மிகவும் பக்கபலமாக இருக்கும். அவருடைய கணவரின் குணத்தை மாற்ற இயலாது. தனது சொந்த செலவிற்காவது அவர் மனைவியை நாடி வருவார். கைச்செலவிற்கு மட்டும் பணம் தந்து கணவரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்படி உங்கள்தங்கைக்கு ஆலோசனை சொல்லுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று மரிக்கொழுந்து மாலை சாத்தி வழிபட்டு வரச் சொல்லுங்கள். சுகம் அடைவார்.

நான் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையின்றி உள்ளேன். ஜாதகம் பார்த்த இடத்தில் திரைத்துறைக்குச் சென்றால் பெரிய ஆளாய் வருவாய் என்கிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை என்றாலும் அதைநம்பி வருவதற்கு பயமாகவும், குழப்பமாகவும் உள்ளது. நல்லவழியை காட்டுங்கள். வீரமணிகண்டன், புதுக்கோட்டை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி துவங்கி உள்ளது. தொழிலைப் பற்றி சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் நான்கில் அமர்ந்திருப்பதால் கலைத்துறையில் ஆர்வம் இருந்தாலும் தொழில்முறையில் உங்களுக்கு நிரந்தர பலனைத் தராது. உங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ற உத்யோகத்தைத் தேடுங்கள். கப்பற்படை, துறைமுகம், மீன்வளத்துறை போன்ற தண்ணீர் சார்ந்த துறைகளில் உங்களுக்கான பணி அமையும். 26.07.2018 முதல் நல்ல நேரம் துவங்கியுள்ளதால் நிரந்தர உத்யோகத்தினை தேடிக் கொள்வது நல்லது.

ஜென்ம லக்னத்தில் இணைந்திருக்கும் சூரியன், புதன், ராகு உங்களை உயர்ந்த உத்யோகத்தில் அமர்த்த துணைபுரிவர்.மாயா உலகமான திரைத்துறை உங்கள் குணத்திற்குச் சரியாக வராது. கனவு கண்டு கால நேரத்தை வீணடிக்காமல் அரசுத்துறை சார்ந்த தேர்வுகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் நாவன்மையைத் தருவர். பேச்சுத்திறன் உங்களை வாழ்வினில் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். புதன்தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி ஐந்து முறை வலம் வந்து வணங்குங்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவீர்கள்.

“ஓம்நம: சிவாயபரமேச்வராயசசிசேகராயநம:ஓம்

பவாய குண ஸம்பவாயசிவ தாண்டவாயநம:ஓம்.”

பிடிவாதமாக காதல் திருமணம் செய்த என் வாழ்க்கை எதிர்பார்ப்பிற்கு மாறாக தலை கீழாக அமைந்துவிட்டது. என் சந்தோஷம், நிம்மதி, அடிப்படை சுதந்திரம் அனைத்தும் பறிபோய் அடிமையாய் நிற்கிறேன். கணவரின் சந்தேகத்தால் வீட்டிற்குள்ளே அடைபட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதய நோயாளியான எனது நல்வாழ்விற்கு ஒரு வழி சொல்லுங்கள். ஒரு வாசகி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்மலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதகங்களிலும் நல்ல தசாபுக்தி நடந்தும் அதனை அனுபவிக்கும் அம்சம் இல்லாமல்போய் இருக்கிறது. உங்கள் கணவரின் தாழ்வு மனப்பான்மையே உங்களின் இந்த நிலைக்குக் காரணமாய் அமைந்துள்ளது. தாழ்வு மனப்பான்மையால் தவிக்கும் உங்கள் கணவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறார்.

சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் அடங்கிச் செல்வது உங்கள் இருவரின் வாழ்க்கைக்கும் நல்லதல்ல. தற்கொலை என்பது பிரச்னைக்குத் தீர்வாகாது. நீங்கள் இல்லாவிட்டால் உங்கள் கணவரின் வாழ்வும் சூனியமாகிவிடும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது சொந்தமாக நீங்கள் தொழில் செய்ய இயலும். பியூட்டி பார்லர் முதலான தொழில்கள் கைகொடுக்கும். உங்களுடைய நேரம் நன்றாக இருப்பதால் வங்கி சார்ந்த கடனுதவியைப் பெற இயலும். முதலில் நீங்கள் இருக்கும் ஊரிலிருந்து வெளியூருக்கு இடம் பெயருங்கள். உறவினர் வழியில் ஒரு பெண்மணி உங்களுக்கு உதவுவார். உங்கள் பிரிவு கணவரின் மனதைமாற்றும். மனக்குழப்பம் நீங்கி அவராக உங்களை நாடி வருவார். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாருங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

தற்போது நில புரோக்கராக உள்ளேன். ஒரு கம்பெனி ஒர்க்கிங் பார்ட்னர் என்ற முதலாளி சீட் தரஉள்ளார்கள். அதில் வெற்றி பெற்று அந்த கம்பெனியும் நானும் நல்லநிலைக்கு வர வேண்டும். மேலும் ஒரு வருடத்தில் வீடு கட்டி, எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அமைக்க வேண்டும். உரிய பரிகாரம் சொல்லுங்கள். கிருஷ்ணகுமார், நாமக்கல்.

உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது. அதே நேரத்தில் அதிகப்படியான தன்னம்பிக்கையும், தகுதிக்கு மீறிய பேராசையும், அவசரத்தன்மையும் ஆபத்தினைத் தந்துவிடும் என்பதை நினைவில் கொண்டு நிதானித்து செயல்படுங்கள். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. தற்போது நல்ல நேரம் நடந்துகொண்டிருப்பதால் அதிகப்படியான கற்பனையில் உள்ளீர்கள். நாளை என்பதில் அதிக கவனம் கொள்ளாது இன்றைக்குச் செய்ய வேண்டிய கடமையில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வரும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளி பதவியினை ஏற்றுக் கொண்டாலும், அடிப்படையில் நீங்கள் ஒரு தொழிலாளிதான் என்ற எண்ணத்துடனேயே செயல்படுங்கள். நீங்கள் நல்ல நிலைமைக்கு வருவதோடு உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட கம்பெனியும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். தொழில் ஸ்தானத்தில் இணைந்துள்ள சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோர் உங்கள் உழைப்பிற்கான பலனை அள்ளித் தருவார்கள். 47வது வயது முதல் 54வது வயது நடக்க உள்ள கேது தசை சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எக்ஸ்போர்ட்ஸ் தொழில் என்று அகலக்கால் வைக்காது செய்து வரும் தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். தற்போது நேரம் நன்றாக இருப்பதால் பரிகாரம் ஏதும் தேவையில்லை. உழைப்பு ஒன்றே உயர்வினைத் தரும்.

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து விட்டேன். திருமணம் செய்து கொண்ட பெண்ணை அழகில்லை என்று நிராகரித்து விட்டேன். தாலி கட்டியதுடன் சரி, பிரிந்து வந்து விட்டேன். 33 வருடங்களாக வாழ்க்கையில் துன்பம் அனுபவித்து வருகிறேன். மனம் துர்மரணத்தை நாடுகிறது. இந்த துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். தங்கராஜ், ராசிபுரம்.

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய நினைக்கிறீர்கள். பெண்பாவம் பொல்லாதது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்கள். செய்த தவறை உணர்பவனுக்கு மன்னிப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி சூரியன் 12ல் அமர்ந்திருப்பதால் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகிறீர்கள். தற்போதைய சூழலில் உங்கள் தொழிலை மாற்ற வேண்டாம். வருகின்ற ஜனவரி மாதத்திற்கு மேல் நீங்கள் விரும்புவதுபோல் தள்ளுவண்டி கடையைப் போடலாம். 26.01.2020க்கு மேல் உங்கள் வாழ்வினில் புதிய திருப்புமுனையைக் காண்பீர்கள்.

வாரிசு இல்லாத நீங்கள் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள அந்தக் குழந்தையை நல்லபடியாக படிக்க வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவீர்கள். அந்தப் பெண் குழந்தைக்கு நீங்கள் செய்து வரும் சேவையே செய்த பாவத்திற்கு விமோசனமாக அமைகிறது. மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்ப்பதே உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு புதன்கிழமை நாளில் திருவண்ணாமலைக்குச் சென்று உங்கள் மகளுடன் கிரிவலம் செய்து அண்ணாமலையாரை வணங்குங்கள். மனநிம்மதி அடைவீர்கள்.

43 வயதாகும் நான் தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலைஉதவியாளராகபணி புரிகிறேன்.திருமணம் நடைபெற வேண்டி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்குச் சென்று வந்துள்ளேன். குருபலன் எப்போது வந்து சேரும்? திருமணத் தடை நீங்க நான் என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீதர், சென்னை.

பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது கேதுதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. இருபத்தி நான்காவது வயதில் திருமண யோகம் என்பது வந்திருக்கிறது. உங்கள்ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கும், ராசிக்கும் அதிபதியான குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதும், திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி புதன் வக்ரகதியில் சூரியனுடன் இணைந்திருப்பதும் திருமணத்தடையை உண்டாக்கி வருகிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் திருமணத்திற்கு துணை செய்கிறது. உங்கள் தாயாரின் சொந்த ஊரைச் சேர்ந்த பெண்ணாகவும், தாயார் வழியில் தூரத்து உறவினர் ஆகவும் மணமகள் அமைவார்.

நீங்கள் சார்ந்திருக்கும் குலத்திற்கு ஆச்சாரியார்களாக விளங்கியவர்களின் மூல பிருந்தாவனத்திற்குச் சென்று வியாழக்கிழமைநாளில் ஈரத்துணியுடன் அங்க ப்ரதட்சிணம் செய்வதால் குரு மகான்களின் ஆசிர்வாதத்தினைப் பெற இயலும். குருவின் ஆசி இருந்தால் திருமணத்தடை நீங்குவதோடு உங்கள் குலமும் விருத்தி காணும். ஒருமுறை மந்த்ராலயத்திற்குச் சென்று ஸ்ரீ ராகவேந்திரரையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அக்டோபரில் நடைபெறஉள்ள குரு பெயர்ச்சியும் உங்கள் திருமணத்திற்கு துணை செய்யும். 17.12.2018ற்கு மேல் உங்கள் திருமணம் நடந்து விடும். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: