வலங்கைமான்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டைத்தெருவில் மகாமாரியம்மன் கோயிலில். ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவைப் போன்று ஆவணி ஞாயிறு திருவிழாவும் சிறப்பானதாகும்.
இதனை அடுத்து ஆவணி கடைஞாயிறு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பகுளத்தில் நடைபெற்றது. அப்போது அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன்,மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.