ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரமோற்சவ திருக்கல்யாண உற்சவம்

பெரணமல்லூர்:  பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்குள்ள சீனுவாச பெருமாள் சன்னதியில் கடந்த 13ம் தேதி புரட்டாசி பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும், இரவில் பல்வேறு அலங்காரத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று 5ம் நாள் விழாயொட்டி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மணக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு ஆடல், பாடலுடன் மாலை மாற்றப்பட்டது. தொடர்ந்து, பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மணக்கோலத்தில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: