ஏரல்: சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா விமரிசையாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா கடைசி செவ்வாய்க்கிழமையன்று விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடை விழாவான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், நண்பகல் 12 மணிக்கு முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு ஆனந்த விநாயகருக்கு மாலை சாத்தி சிறப்பு வழிபாடும், இரவு 8.30 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு மாலை சாத்தி சிறப்பு பூஜையும் நடந்தது.
தொடர்ந்து முளைப்பாரி பெண்கள் அழைத்து வருதல், இரவு 9 மணிக்கு நவீன வில்லிசை, கரகாட்டம் நடந்தது. இரவு 10 மணிக்கு மாவிளக்கு, ஆயிரங்கண் பானை விரதம் இருக்கும் பக்தர்களை மேளத்தாளம் முழங்க கோயிலுக்கு அழைத்து வருதல் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நேற்று (15ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா வாணவேடிக்கையுடன் நடந்தது. இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை நடந்தது. ஏற்பாடுகளை சிவத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை தர்மகர்த்தா அச்சுதன் நாடார் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.