×

மேல்மலையனூர் கோயிலில் ஆடி மாத ஊஞ்சல் உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி மாத ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திலிருந்து வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய், எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோயில் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ், கோயில் அறங்காவல் குழு தலைவர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி