×

நோய்களின் பிடியில் இருந்து காக்கும் செல்லாண்டியம்மன்

நாமக்கல் மாவட்டத்தில் பழம்பெருமை பெற்ற ராசிபுரம் நகரத்தில் இருக்கிறது செல்லாண்டியம்மன் கோயில். இந்த கோயிலில் ஒரு புறத்தில் காக்கும் செல்லாண்டியாக விளங்கும் அம்மன், மறுபுறத்தில் மங்கள வாழ்வருளும் நித்யசுமங்கலி மாரியம்மனாக அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இதில் ஊரின் நுழைவு வாயிலில் இருக்கும் செல்லாண்டியம்மன் தான், ஒட்டுமொத்த மக்களுக்கும் காவல் தெய்வம். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னர்களால் கட்டப்பட்டு, வழிபட்ட இந்த கோயிலை சுற்றிலும் கோட்டை போன்ற நீண்ட மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அழகு மிளிரும் சிற்பங்களுடன் காட்சியளிக்கும் கோயில், எப்போதும் புதுப்பொலிவுடன் இருப்பது வியப்பு. செல்லாண்டியம்மன் வழிபாடு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அம்மனை வழிபடுகின்றனர். இதில் கொங்கு மண்டலமான நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் செல்லாண்டியம்மனுக்கு அதிகளவில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காவல் தெய்வமாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் ஒப்பற்ற தெய்வமாக போற்றப்படுகிறது. ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட கிராமத்து மக்கள், ஊரைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. காப்பு கட்டி, கம்பம் நட்ட பிறகு, ஊரை விட்டு வெளியேறக் கூடாது எனக் கூறி பலர் அங்கேயே இருந்தனர். இதையடுத்து திருவிழா முடிந்து கம்பத்தை அருகில் உள்ள குளத்தில் போட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே, குளத்தில் வீசப்பட்ட கம்பம், கோயில் வளாகத்தில் இருந்தது.

இதனால் மெய்சிலிர்த்த ஊர்மக்கள், செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது அங்கிருந்த பெண்களுக்கு அம்மன் அருள்வந்து சாமியாடினர். அவர்கள், இந்த கம்பம் எனது அம்சம். அதை நிரந்தரமாக கோயிலுக்குள் வைத்து நீங்கள் வழிபட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ஊர்மக்கள், அந்த கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனாக நினைத்து அங்கேயே வைத்து வழிபட ஆரம்பித்தனர். இதற்கடுத்த சிலநாட்களில் ஊர்மக்களை பிடித்திருந்த நோய், நொடிகள் அகன்றது. மாதம் மும்மாரி பொழிந்து வளம் கொழிக்கும் பகுதியாக ராசிபுரம் மாறியது. இதர கோயில்களில் திருவிழா நாட்களில் மட்டுமே கம்பம் நடப்படும். ஆனால் அம்மனின் அம்சமான கம்பம், இந்த கோயிலில் நிரந்தரமாக இருப்பதும், அதை வழிபட்ட பின்னர், அம்மனை பக்தர்கள் வழிபடுவதும் சிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் பழைய கம்பத்தை கிணற்றில் போட்டுவிட்டு, புதிய கம்பத்தை கோயில் நிர்வாகிகள் நடுகின்றனர். அது ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கிறது. இங்கு ஐப்பசி மாதத்தில் 15 நாட்கள் நடக்கும் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போதும் சக்தி அழைத்து, அக்னிகுண்டம் இறங்கி, உருளுதண்டம் போட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் அனைத்து விசேஷநாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கொடிய நோய்களின் பிடியில் இருந்து நம்மை காப்பவள் செல்லாண்டியம்மன். நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர், இங்கு வந்து அம்மனை வழிபட்டு நிவர்த்தியடைகின்றனர் என்கின்றனர் ஆண்டாண்டு காலமாய் செல்லாண்டியம்மனை வழிபடும் பக்தர்கள்.

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா