×

தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?

இந்துக் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதேன்?  - சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

 சுப்ரமணியருக்கு வள்ளி - தெய்வானை, பெருமாளுக்கு ஸ்ரீதேவி - பூதேவி, பரமேஸ்வரனுக்கு கங்கா - கௌரி,  சாஸ்தாவிற்கு பூர்ணா - புஷ்கலா, விநாயகருக்கு சித்தி - புத்தி என இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களுக்கு இரண்டு  மனைவிகள் இருப்பது எதனால் என்பது உங்கள் ஐயம். மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு மனைவிகள்  இருப்பதுபோல் தோன்றும். அதில் உள்ள சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.இறைசக்தியை இச்சாசக்தி,  கிரியாசக்தி, ஞானசக்தி என்று மூன்றாகப் பிரிக்க முடியும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ‘இச்சாசக்தி, ஞான சக்தி, க்ரியா  சக்தி ஸ்வரூபிண்யை நமஹ’ என்று ராஜராஜேஸ்வரியைப் போற்றி ஒரு நாமாவளி கூட உண்டு. ‘அஹம்  ப்ரஹ்மாஸ்மி’ என்கிற ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தின்படி கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார் என்ற  கோணத்திலும் இந்த கருத்தினை ஆராய இயலும். அதாவது, மனிதனுக்குள் இருக்கின்ற ஆத்மாவை ஜீவாத்மா,  பரமாத்மா, அந்தராத்மா என்று மூன்றாக பிரிக்க இயலும். இறை சக்தியின் மூன்று பிரிவுகளையும், ஆத்மாவின் இந்த  மூன்று பிரிவுகளையும் இப்பொழுது ஒப்பிட்டுப் பாருங்கள். கிரியாசக்தி என்பதை ஜீவாத்மா உடனும், ஞானசக்தியை  பரமாத்மா உடனும், இச்சாசக்தியை அந்தராத்மா உடனும் பொருத்திப் பார்க்க இயலும். அதாவது உடலின் இயக்கத்திற்கு  ஜீவன் எனும் உயிர் என்பது தேவைப்படுகிறது. அதுவே, கிரியா சக்தி. நமது ஆசை, சிந்திக்கும் திறன் ஆகியவற்றிற்கு  அந்தராத்மா தேவைப்படுகிறது. அதுவே இச்சா சக்தி. இச்சை என்றால் ஆசை என்று பொருள். இந்த ஜீவாத்மாவும்,  அந்தராத்மாவும் சரியாகச் செயல்பட்டால்தான் நாம் நல்ல மனிதனாக வாழ முடியும். வெறும் ஜீவாத்மா மட்டும்  இருந்தால், அதாவது.

உடலில் உயிர் மட்டும் இருந்து அந்தராத்மா எனும் மூளை செயல்படாவிட்டால் கோமா என்ற நிலையிலோ அல்லது  வெறும் ஜடப் பொருளாகவோ மட்டும்தான் இருக்க முடியும். அந்தராத்மா இருந்தாலும் அது சரியாக செயல்படாமல்  இரண்டும் கெட்டானாக இருந்தால் அந்த மனிதனை பைத்தியம் என்று அழைப்போம். வெறும் அந்தராத்மா மட்டும்  இருந்து ஜீவாத்மா இல்லை எனில் அதாவது, உயிர் இல்லை எனில் அந்த உடலை பிணம் என்று அழைப்போம். அதோடு  அந்தராத்மா என்பது பேய் என்ற பெயரோடு ஆவியாக அலைந்து கொண்டிருக்கும். இவ்வாறு ஜீவாத்மாவும்,  அந்தராத்மாவும் நல்ல நிலையில் ஒருங்கே இணைந்து இயங்கினால்தான் பரமாத்மாவைக் காண இயலும். அதாவது
நமக்குள் இருக்கும் இறைவனைக் காண இயலும். அதேபோல இச்சாசக்தியும், கிரியா சக்தியும் ஒருங்கிணைந்து  செயல்பட்டால்தான் ஞானசக்தி என்ற இறைவனை அடைய இயலும். இதனை நமக்கு உணர்த்தும் விதமாகத்தான்  இச்சாசக்தி என்ற வள்ளியும், கிரியா சக்தி என்ற தெய்வானையும் ஒன்றாக இணைந்து ஞானசக்தி என்று சுப்ர
மணியரோடு நமக்கு காட்சியளிக்கின்றனர்.

இந்து கடவுள்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகச் சொல்லப்படுவதற்கான காரணம் இதுவே. ஒரு மனைவியை  இச்சா சக்தியாகவும், இன்னொரு மனைவியை கிரியா சக்தியாகவும் கொண்டு ஞானசக்தியான அந்த இறைவன் நம்மைக்  காக்கிறான் என்பதே இதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமம். இதனைப் புரிந்து கொண்டு நோக்குபவர்களின் கண்களுக்கு  ஞானசக்தி புலப்படும் என்பது மட்டுமல்ல, தனக்குள் இருக்கும் பரமாத்மாவையும் உணரமுடியும் என்பதே நிதர்சனமான  உண்மை. இக்கால இளைஞர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக சொல்லவேண்டும் என்றால் கிரியாசக்தி எனும்  ஜீவாத்மாவை ஹார்டுவேர் (hardware) என்று வைத்துக் கொள்ளலாம். இச்சாசக்தி எனும் அந்தராத்மாவை  சாஃப்ட்வேர் (software) என்று புரிந்துகொள்ளலாம்.இந்த ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் இரண்டும் இணைந்து  சரியாக செயல்பட்டால்தான் ப்ரோக்ராம் (program) என்ற ஞானசக்தியின் பலனை நாம் சரியாக அனுபவிக்க இயலும்.  இரண்டு மனைவிகள் என்று தவறாக எண்ணாமல் இரண்டு விதமான சக்திகள் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்.  உண்மை தெளிவாக விளங்கும்.

விநாயகர் சிலையை மற்றோர் இடத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தால் மிகவும்  அதிர்ஷ்டமாகவும், செல்வங்கள் நிறையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இது உண்மையா? - பொன்.மாயாண்டி, இராயபுரம்.

இது முற்றிலும் தவறான கருத்து. சிற்ப சாஸ்திரத்தின் படி முறையாக வடிக்கப்பட்ட சிலையாகவும், ஆகமம் அல்லது  வைதீகம் என்று எந்த முறையில் பிரதிஷ்டை செய்கிறார்களோ அந்த முறையில் தினந்தோறும் தவறாமல் நடத்தப்படும்  பூஜைகளாலும்தான் அந்தச் சிலை சாந்நித்யம் பெறும்.சாந்நித்தயம் உள்ள சிலைகளுக்கு தனி சக்தி உண்டு. தெய்வ  சாந்நியமும், நமது நம்பிக்கையும்தான் பலன்களைத் தருமே அன்றி வெளியில் இருந்து சிலைகளைத் திருடிக் கொண்டு  வந்து பிரதிஷ்டை செய்வதால் எந்தவித பயனும் இல்லை. சமீபத்தில் ஒரு நடன நடிகர் நடித்த திரைப்படத்தில்  நகைச்சுவைக்காக இதுபோன்ற ஒரு சம்பவத்தை காட்சிப்படுத்தி இருப்பார்கள். உச்சபட்சமாக இந்தச் சிலையை திருடிக்  கொண்டு வந்தவர்கள் என்று திருடர்களின் பெயர்களை கல்வெட்டாக ஆலய வளாகத்தில் பதித்திருப்பதையும்  காண்பிப்பார்கள். நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் இது ஒரு தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். விநாயகர்  சிலையை மற்றோர் இடத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தால் மிகவும் அதிர்ஷ்டமாகவும்,  செல்வங்கள் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகின்ற கருத்து முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்த  சந்தேகமும் இல்லை.

திருமண நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் இடையில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் துக்க சம்பவம்  நடந்தால் அதில் கலந்துகொள்ளக் கூடாது என்பது சம்பிரதாயம். தற்காலத்தில் நிச்சயம் முடிந்து ஏழெட்டு மாதங்கள்  கழித்து திருமணத்தை வைத்துக் கொள்கிறார்கள். இந்த நீண்ட நெடிய காலத்தில் துக்க நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது  சாத்தியமா? - வெங்கட்ராமன், செகந்திராபாத்.

சாஸ்திரம் என்பது வேறு. சம்பிரதாயம் என்பது வேறு. நீங்கள் சொல்லும் நடைமுறையை சம்பிரதாயம் என்று நீங்களே  குறிப்பிட்டுள்ளீர்கள். சாஸ்திரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய இயலாது, செய்யவும் கூடாது. ஆனால்  சம்பிரதாயம் என்பது பழக்கவழக்கத்தையே குறிக்கும். இது வீட்டிற்கு வீடு மாறுபடும். சம்பிரதாயத்தில் சந்தேகம் என்று  வரும்போது வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது நல்லது. சாஸ்திரத்தில் சந்தேகம்  வரும்போது குடும்ப புரோஹிதர் அல்லது சாஸ்திரிகள் சொல்வதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நிச்சயதார்த்தம்  என்பது திருமணத்திற்கு முதல்நாள் மாலை நடத்தப்படுவதே சரியான நடைமுறை ஆகும். கால தேச வர்த்தமானத்தில்  உண்டான மாற்றத்தின்படி ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் என்று நாம் நடத்தினாலும் அதனை  முறையான ஒன்று என்று சாஸ்திரம் ஏற்றுக் கொள்ளாது. இதனை மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு  வீட்டாருக்கும் இடையே செய்து கொண்ட ஒரு ஒப்பந்தமாகத்தான் கருத முடியும். இருவீட்டாருக்கும்

இடையில் திருமண பந்தம் செய்து கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக இந்த இரண்டு  குடும்பத்தாரும் உற்றார் உறவினர் வீட்டில் நடைபெறும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல  முடியாது. திருமணத்திற்கான பூர்வாங்க நிகழ்வுகள் அதாவது, பந்தக்கால் நடும்வரை இரு குடும்பத்தாரும் உற்றார்  உறவினர் இல்லங்களில் நடக்கும் துக்க நிகழ்வுகளில் பங்கு பெறலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.

குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சியின்போது ஒருவர் முருகனுக்கு பரிகாரம் செய்யச் சொல்கிறார். மற்றொருவர்  அம்பாளுக்கு என்றும், இன்னொருவர் பெருமாளுக்கும் பரிகாரம் செய்யச் சொல்கிறார்கள். ஜோதிடருக்கு ஜோதிடர்  முரண்பட்டால் பக்தர்கள் எப்படி, எதை நம்ப முடியும்? - ஆர்.கே. லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

ஜூரம் வந்துவிட்டது என்று மருத்துவரிடம் செல்கிறீர்கள். ஒரு மருத்துவர் ‘டோலோ’ என்ற மாத்திரையை எழுதித்  தருவார். மற்றொருவர் ‘கால்பால்’ என்றும் இன்னொருவர் ‘குரோசின்’ சாப்பிடுங்கள் என்றும் பரிந்துரைப்பார்கள்.  மருத்துவருக்கு மருத்துவர் ஒரே நோய்க்கு வெவ்வேறு மருந்துகளை எழுதித் தருகிறார்கள் என்று கருதுவது தவறு. இந்த  மாத்திரைகள் எல்லாவற்றிலும் ‘பேரசிட்டமால்’ என்று அச்சடித்திருப்பதைக் காண முடியும். பேரசிட்டமால் என்பது  மருந்தின் பெயர். அடிப்படையில் ‘அசிட்டமினோஃபின்’ என்ற வேதிப்பொருள் இந்த மருந்தில்  உபயோகப்படுத்தப்படுகிறது. கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் (C8H9NO2) என்று நமது அண்டத்தில்  கலந்துள்ள காற்றில் உள்ள மூலக்கூறுகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து இந்த வேதிப்பொருளை  உருவாக்குகிறார்கள். நாம் மேலே கண்ட டோலோ, கால்பால், குரோசின் போன்றவை ஒவ்வொரு மருந்து கம்பெனியும்  தாங்கள் தயாரித்த மாத்திரைகளுக்கு வைத்துக்கொண்ட பெயர்கள். அவ்வளவுதான். அடிப்படையில் இந்த மாத்திரைகள்  அனைத்தும் ஒன்றுதான்.

இவ்வாறே ஒவ்வொரு ஜோதிடரும் கஷ்டம் என்று வருபவர்களுக்கு பரிகாரம் சொல்லும்போது இறைசக்தியை நாடுங்கள்  என்று சொல்கிறார். ஜூரத்திற்கான மாத்திரைகளின் அடிப்படையில் எவ்வாறு பேரசிட்டமால் என்ற ஒரே மருந்து  இருக்கிறதோ, அவ்வாறே பரிகாரங்களின் அடிப்படையில் இறைவன் என்ற ஒரே சக்தியைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.  அது வெவ்வேறு பெயர்களில் வேண்டுமானால் அழைக்கப்படலாம். அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான். குரு பெயர்ச்சி,  சனிப் பெயர்ச்சி மட்டுமல்ல, சாதாரணமாக ஜாதகம் பார்க்கச் செல்லும்போது கூட உங்கள் தசாபுக்தியின் அடிப்படையில்  பலனைச் சொல்லும் போது ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான கோவிலுக்குச் செல்லுமாறு சொல்வார்கள்.  அதற்காக அவர்கள் சொல்லும் பலன்களைத் தவறு என்று கருத முடியாது.

அவர்களுடைய நோக்கம் உங்களுடைய கஷ்டம் தீர்ந்து நீங்கள் நலம் அடைய வேண்டும் என்பதுதான். அந்த  நோக்கத்திற்காக அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளே நீங்கள் சொல்லும் முருகன், அம்பாள், பெருமாள் ஆகியன.  அவர்கள் சொல்ல வருவது நீங்கள் இறைச் சக்தியை நம்பினால் மட்டுமே பிரச்னையில் இருந்து விடுபட இயலும்  என்பதே. முருகன் கோயிலுக்குப் பதிலாக பெருமாள் கோயிலுக்குச் செல்வதைத் தவறு என்று எந்த ஒரு ஜோதிடரும்  சொல்ல மாட்டார்கள். மருத்துவருக்கு மருத்துவர் ஒரே நோய்க்கு எவ்வாறு வெவ்வேறு மருந்தின் பெயர்களை  பரிந்துரைக்கிறார்களோ, அந்தப் பரிந்துரையிலும் நாம் எவ்வாறு குற்றம் காண இயலாதோ, அவ்வாறே ஜோதிடருக்கு  ஜோதிடர் வெவ்வேறு தெய்வங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். இதில் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள்  என்று சொல்லப்படும் கருத்து ஏற்புடையது அல்ல. குடும்ப மருத்துவர் என்று ஒருவரை வைத்திருப்பதுபோல ஒரே  மனிதரை குடும்ப ஜோதிடராக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் மட்டும் உங்கள் ஜாதகத்திற்கான பலன்களைத்  தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு அவர் சொல்லும் பரிகாரங்களைச் செய்து வாருங்கள். நிச்சயமாக பலன்  அடைவீர்கள்.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன? அப்போது சூரிய பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமா?
 - அயன்புரம் த. சத்தியநாராயணன்.


நிச்சயமாக. சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்  காலம் என்று குறிப்பிடுகிறார்கள். 27 நட்சத்திரங்களில் அக்னி என்ற நெருப்புக் கடவுளை தனது தேவதையாகக் கொண்டிருக்கும் நட்சத்திரம் கார்த்திகை. ‘அக்னிர் ந பாது க்ருத்திகா’ என்று வேதம் சொல்கிறது. அதனால்தான்  கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாட்களில் நெருப்பு வடிவில் இறைவனை தரிசனம் செய்கிறோம். அக்னி  ஸ்தலம் ஆகிய திருவண்ணாமலையின் உச்சியில் ஜோதியை ஏற்றுகிறார்கள். அக்னியைத் தனது தேவதையாகக்  கொண்ட கிருத்திகை நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிப்பதால்தான் இந்த நாட்களை ‘அக்னி நட்சத்திரம்’ என்ற  பெயரில் அழைக்கிறார்கள். கிருத்திகைக்கு முன்னதாக வருகின்ற பரணி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள்,  கிருத்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மற்றும் அடுத்தபடியாக வருகின்ற ரோகிணி நட்சத்திரத்தின் முதல்  இரண்டு பாதங்கள் என சூரியன் சஞ்சரிக்கும் காலத்தினை அக்னி நட்சத்திர காலமாக வரையறுத்திருக்கிறார்கள்.  பொதுவாக சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை அதாவது, மே மாதம் 4ம் தேதி முதல்  மே மாதம் 28ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரத்திற்கு உரிய காலம் வரும். அக்னியை தேவதையாகக் கொண்ட கிருத்திகையின் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இந்தக்  காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.

ஒருவனைப் பார்த்து இவன் ‘சனியன் பிடித்தவன்’ என்கிறோம். ஏன்?- ஆர்.நாராயணசாமி, கோவை- 45.


அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பவன், சதா சோம்பல்தன்மையுடன் இருப்பவன், சுறுசுறுப்பின்றி சோகமாகக்  காணப்படுபவன் ஆகியோரை சனியன் பிடித்தவன் என்று சொல்வது நம் வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு சொல்லப்படுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பிச்சைக்காரர்கள் எல்லோருடைய ஜாதகத்திலும் சனியின்  தாக்கம் கண்டிப்பாக இருக்கும். சனியின் தாக்கம் இன்றி ஒருவனால் பிச்சைக்காரனாக நிச்சயம் இருக்க முடியாது. கடும்  உழைப்பாளிகளாக இருந்தால் கூட அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பவர்களின் ஜாதகத்திலும் சனியின் தாக்கம்  இருக்கும். உதாரணத்திற்கு மெக்கானிக் தொழில் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள் போன்றோரின் ஜாதகத்திலும்  சனியின் தாக்கம் காணப்படும். சனி என்ற கிரகத்திற்கு உரிய காரகத்துவமாக அழுக்கு, சோம்பல், சோகம், திருட்டு  ஆகியவை மட்டுமல்ல கடுமையான உழைப்பு, அதிகப்படியாக உழைத்து குறைவாக சம்பாதிப்பது ஆகியவை உள்பட  அனைத்தும் சனியின் கட்டுப்பாட்டிற்குள் வருபவை. பொதுவாக தரித்திரம் பிடித்த நிலையில் இருக்கும் மனிதர்களை  சனியன் பிடித்தவன் என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே பரவியுள்ளது. இந்த வார்த்தையில் உண்மை இருக்கத்தான்  செய்கிறது.

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும் போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்? - ஆர்.சுவாமிநாதன், கும்பகோணம்.

“எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்ற அடுத்த வரியை கவனித்திருக்கிறீர்களா. தென்னாடுடைய சிவனே  போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற இந்த வரிகளை நாம் திருவாசகத்தில் இருந்து எடுத்துக்  கொண்டிருக்கிறோம். திருவாசகத்தில் ‘போற்றித் திருஅகவல்’ எனும் நான்காம் அத்தியாயத்தில் 164 மற்றும் 165வது  வரிகளாக இடம்பெற்றிருக்கும் இவ்விரண்டு வரிகளும் என்றென்றும் நம் நினைவில்நிற்பவையாக அமைந்துவிட்டது.  திருவாசகத்தைப் பற்றி அறியாதவர் கூட இந்த வரிகளை நிச்சயமாக உச்சரிக்கத் தயங்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்,  நம்மில் பலருக்கும் இந்த வரிகள் திருவாசகத்தில் உள்ள வரிகள் என்பது கூட தெரிந்திருக்காது. மாணிக்கவாசகர்  திருவாசகத்தை இயற்றிய காலத்தில் தென்னகத்தில் சைவ சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. சமயச்  சண்டைகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் மாணிக்கவாசகர் முதலான ஆன்மிகப் பெரியோர்களுக்கு இறைவன்  என்பது ஒருவனே என்பது நன்றாகத் தெரியும். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இறைவனை நோக்கி அவர்  இவ்வாறு பாடுகிறார். தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது,

தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம். எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. அதாவது,  எந்நாட்டில் உள்ளோரும் உன்னை இறைவனாகக் கண்டு போற்றுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாட்டவரும்  காணும் இறைவனும், தென்னகத்தில் உள்ளோர் காணும் சிவனும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக  மாணிக்கவாசகர் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று வலியுறுத்திப்  பாடுகிறார்.இந்த போற்றித் திரு அகவல் என்ற அத்தியாயம் தில்லையில் அருளியது. அம்பலத்தில் ஆடுகின்ற  இறைவனைக் கண்டு மாணிக்கவாசகர் ஆனந்தமாய் மெய்மறந்து உருகிய நிலையில் அருளியதாக உள்ளது. நடராஜப்  பெருமானே இயற்பியல் எனும் இயற்கைப் பற்றிய தெளிவினைத் தரக் கூடியவர் என்பதை நாசா முதலான விஞ்ஞான  ஆராய்ச்சி கூடங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. சிதம்பரத்தில் இன்றும் அந்நிய தேசத்தவர்கள் பெருமளவில் வந்து  செல்வதைக் காண இயலும். இதனை உணர்ந்துதான் மாணிக்கவாசகப் பெருமான் எந்நாட்டவர்க்கும் இறைவனாக  விளங்குபவனே எம் தென்னகத்தில் சிவனாகப் போற்றப்படுகிறான் என்று பாடுகிறார்.வடக்கில் கயிலாயம் இருந்தாலும்  தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடப்பட்டதன் பொருள் இதுவே.

Tags :
× RELATED சுந்தர வேடம்