திருச்செந்தூர்: திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவில் உள்ள இந்து சைவ மருத்துவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடந்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி காலை மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன் ஹோமம், லட்சுமி ஹோமத்தை தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இரவில் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
நேற்று காலை 7 மணிக்கு 4ம் கால யாக பூஜை தொடங்கி 9 மணிக்கு பூர்ணாகுதியை தொடர்ந்து பூஜையிலிருந்து கும்பங்கள் எடுத்து வலம் வந்து விமான தளத்தில் உள்ள சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கலசங்களுக்கு 10 மணிக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்தனர். அதைதொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம், மகாஅபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.