வாலாஜா: வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் அண்ணாநகர் பகுதியில் பழமையான படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மூலவர் விமானம், முகப்பு கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஸ்ரீதர் குருக்கள் தலைமையில் மூலவர் விமானம், பரிகார தேவதைகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வேத விற்பனர்கள் மகாகும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து அன்னதானமும், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை நடந்த யாக பூஜையில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சித்தஞ்சி மோகனானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.