×

பெரணமல்லூர் அருகே மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹூதியும், காலை 8.30 மணியளவில் மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் கலசங்கள் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, 8.50 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி, மாரியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். மேலும், சப்த கன்னிகள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?