நீலகிரி- கேரள எல்லையில் கழிவறை தொட்டி குழியில் மீட்கப்பட்ட புலிக்குட்டி சரணாலயத்தில் விடுவிப்பு

கூடலூர்: நீலகிரி-கேரள எல்லையில் கழிவறை தொட்டி குழியில் இருந்து மீட்கப்பட்ட புலிக்குட்டி, முத்தங்கா சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அடுத்துள்ளது மந்தன்கொல்லி. இது நீலகிரி-கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். அங்கு இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாழடைந்த குழி உள்ளது. கழிவறை தொட்டி அமைப்பதற்காக வெட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் அந்த குழி இருந்தது. இந்நிலையில், அந்த குழிக்குள் அப்பகுதி வழியாக வந்த புலிக்குட்டி ஒன்று நேற்று தவறி விழுந்தது. சிறிய குட்டி என்பதால் மேலே வர முடியாமல் தவித்தது. புலிக்குட்டியை பார்த்த அப்பகுதியில் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. இந்த சத்தம் அந்த பகுதி மக்களுக்கு கேட்டது. இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது குழிக்குள் புலிக்குட்டி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. முத்தங்கா சரணாலய கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று புலிக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் புலிக்குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.பின்னர் நைலான் வலை மூலம் புலிக்குட்டியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அதை கூண்டில் அடைத்து முத்தங்கா புலிகள் சரணாலயத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவித்தனர்….

The post நீலகிரி- கேரள எல்லையில் கழிவறை தொட்டி குழியில் மீட்கப்பட்ட புலிக்குட்டி சரணாலயத்தில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: