மாலை நேர மல்லிப்பூ (தமிழ்) – திரை விமர்சனம்

தலைப்பே சொல்லிவிடுகிறது, இது ஒரு பாலியல் தொழிலாளியின் கதை என்று. எல்லோரையும் போலத்தான் லட்சுமியையும் வறுமை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறது. ஆனால், அவர் தனது மகனை தன்னுடைய உலகம் தெரியாமல் வளர்க்க நினைக்கிறார். வாடிக்கையாளரின் வக்கிர உணர்வுகள், புரோக்கர்களின் டார்ச்சர்கள், உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்னைகள் அவரை விடாமல் துரத்துகிறது. குடியிருக்கும் வீட்டுக்குக்கூட அவரால் வாடகை கொடுக்க முடியவில்லை. திடீரென்று அமல்படுத்தப்பட்ட கொரோனா லாக்டவுன், அவரது வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்குகிறது. இதுதான் படம். ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையுடன் இரண்டு மணி நேரம் பயணித்து வரும் அனுபவத்தை காட்சி வடிவில் வழங்கியிருக்கிறார், இயக்குனர் சஞ்சய் நாராயணன். மற்றபடி ஒரு திரைப்படத்துக்கான வடிவமோ, திருப்பமோ, மெசேஜோ இல்லை.

தனியொருத்தியாக படத்தை தாங்கி நிற்கிறார், வினித்ரா மேனன். பாலியல் தொழிலாளியின் மேனரிசங்கள், ஒரு சராசரி தாய்க்கான உணர்வுகள் ஆகியவற்றைக் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மகனுக்கு தன்னைப்பற்றி தெரிந்துவிடுமோ அல்லது எதிர்காலத்தில் தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தை அப்படியே ரசிகனுக்கும் கடத்துகிறார். அவரது மகன் கர்ணாவாக நடித்திருக்கும் அஸ்வினும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். மற்ற கேரக்டர்களுக்கு அதிக வேலை இல்லை. நொய்டப் டோரிசின் ஒளிப்பதிவு கச்சிதம். எச்.கே.சக்திவேலின் பின்னணி இசை, பெரும்பாலான காட்சிகளுக்கு ஒரேமாதிரி இசைத்துள்ளது. அடல்ட் காட்சிகள் அதிகமாக இருப்பதால், குடும்பத்துடன் பார்க்க முடியாது. பெரியவர்கள் ஒருமுறை பார்க்கத் தகுந்த படமாக இருக்கிறது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The post மாலை நேர மல்லிப்பூ (தமிழ்) – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: