×

எந்திரன் பட கதை விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு: எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி

சென்னை: எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று அறிவிக்க கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஷங்கர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, வக்கீல்கள் அருண் சி.மோகன், டி.சாய்குமரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரிடம் நடத்திய குறுக்கு விசாரணையில், ராணுவத்துக்கு உதவியாக விஞ்ஞானியை போல ரோபோ தன் கதையில் உருவாக்கப்படவில்லை. எந்திரன் படத்தில் ரோபோ பிரித்து குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. கடையில் அழிக்கப்படுகிறது. ஆனால், தன் கதையில் ரோபோ தற்கொலை செய்துக் கொள்கிறது என்று ஒப்புக் கொண்டார். இதுபோல இரு கதைகளுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது. அதேநேரம், அந்த சிந்தனை, கருத்தை வெளிப்படுத்தும் விதத்தின் மீதுதான் காப்புரிமை கோர முடியும்.

இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்துள்ளது. ஒரே சிந்தனை பல விதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை இருவரும் மனித ரோபோவை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளனர். இரு கதைகளுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. எனவே, மனுதாரரின் கதையை அப்படியே எந்திரன் படமாக எதிர்மனுதாரர் ஷங்கர் எடுத்துள்ளார் என்று நிரூபிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிர்மனுதாரர் ஷங்கருக்கு வழக்கு செலவு தொகையை மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post எந்திரன் பட கதை விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு: எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Igourd ,Chennai ,Chennai High Court ,Endran ,Rajinikanth ,Aishwarya Rai ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...