இளம்பிள்ளை, ஆக.1: இடைப்பாடியை சேர்ந்தவர் பிரேம் (47). இவர் சேலம் – இடைப்பாடி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து இடைப்பாடிக்கு பஸ்சை ஓட்டி சென்றார். காகாபாளையம் பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, பிரேமுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின்ரோட்டின் ஓரமுள்ள மரத்தின் மீது மோதி பஸ்சை நிறுத்தினார். இதில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணிகள் பிரேமை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெஞ்சுவலியால் பஸ்சை மரத்தில் மோதி நிறுத்திய டிரைவர் சாவு appeared first on Dinakaran.
