‘இனி குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம்’: 50 வயதில் மீண்டும் தந்தையான பிரபுதேவா பேட்டி

சென்னை: நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பிரபுதேவா, கடந்த 1995ல் தன்னுடன் பல படங்களில் பணியாற்றிய நடனக்கலைஞர் ரமலத் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் பிறந்து வளர்ந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2011ல் ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவை காதலித்து பிறகு அவரையும் பிரிந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியிருந்த நிலையில், ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில், ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பையில் தங்கியிருந்த பிரபுதேவா, கடுமையான முதுகுவலி காரணமாக சிகிச்சை பெற்றார். அப்போது பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, உடனே அவரை தீவிரமாக காதலித்த பிரபுதேவா, கடந்த 2020ல் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் மீடியாவில் வெளியானது. இதுகுறித்து எதுவும் பேச விரும்பாமல் அமைதியாக இருந்த பிரபுதேவா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘ஆமாம், எனது 2வது மனைவியின் மூலம் எனக்கு குழந்தை பிறந்திருப்பது உண்மைதான். நான் 50 வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன். இது எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. வாழ்க்கையில் மனநிறைவு அடைந்துள்ளேன். தற்போது சினிமாவில் எனது வேலைகளை கணிசமாக குறைத்துவிட்டேன். இதுவரை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த நான், இனி என் மகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

The post ‘இனி குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம்’: 50 வயதில் மீண்டும் தந்தையான பிரபுதேவா பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: