×

4000 தெரு நாய்களின் உடலில் அரிசி வடிவ ‘சிப்’வீட்டு நாய்களுக்கு மைக்ரோ ‘சிப்’ பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்: சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை: சென்னையில் வீட்டு நாய்களுக்கு உடலில் ‘சிப்’ பொருத்தவும், 4 ஆயிரம் தெரு நாய்களின் உடலில் அரிசி வடிவ சிப்பும் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டை பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும்.

இந்த சிப் ஒரு அரிசி பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும். அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும். உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும். RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

இந்த தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும். இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விவரங்களைக் கண்காணிக்க முடியும். வருடாந்திர தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலை உரிமையாளர்களுக்கு அனுப்ப முடியும். இந்த மைக்ரோ சிப்புகளின் மூலம், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் முடியும். கடந்த 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும். இனப்பெருக்கக் கட்டுப்பாடு சிகிச்சை வழங்க தற்போது 5 மையங்கள் செயல்படுகின்றன. மேலும் 10 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 15 ஆயிரம் நாய்களுக்கு இந்த சிகிச்சையை செய்திருந்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் நாய்களுக்கு செய்ய திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு, கூடுதல் மையங்களுடன் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்” என்றார்.

கைவிடப்படும் ராட்வீலர், டாபர்மேன்
விலங்கு நல ஆர்வலர் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் எத்தனை நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் அதிகாரிகளிடம் இல்லை. இருப்பினும் கைவிடப்படும் நாய்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன. ப்ளூ கிராஸ் காப்பகத்தில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 15 கைவிடப்பட்ட வீட்டு நாய்கள் தஞ்சமடைகிறது. ராட் வீலர், டாபர்மேன் உள்ளிட்ட வகை நாய்கள் கைவிடப்படுகின்றன. நாய்கள் குட்டியாக இருக்கும்போது அவை பார்க்க அழகாக இருக்கின்றன என்று நினைத்து வாங்கி விடுகிறார்கள்.

ஆனால் அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் கைவிடுகின்றனர். சிலர் வெளிநாடு செல்வதால் கைவிடுகின்றனர். இன்னும் சிலரது வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு நாய்கள் பிடிக்காததால் கைவிடுகின்றனர். சென்னையில் வளர்ப்பு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு இல்லாத நிலையில், சுமார் ஒரு லட்சம் நாய்கள் வீட்டில் வளர்க்கப்படலாம். இந்த நாய்களை பதிவு செய்வது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி கூறினாலும், அனைவரும் முன்வந்து பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்பட்ட நாய்களுக்கே சிப்கள் பொருத்தப்படும்” என்று கூறினார்.

நாய்களுக்கு பாதிப்பில்லை
சென்னையில் வளர்ப்பு நாய்கள் ஆன்லைன் பதிவு 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 9,600 நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓர் உரிமையாளர் எத்தனை நாய்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாம், நாய்களைப் பதிவு செய்யாவிட்டால் அதற்கான நடவடிக்கை, வளர்ப்பு நாய்களைக் கைவிட்டால் அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை. அதேபோல், சென்னையில் ஏற்கனவே மெரினா கடற்கரையில் உள்ள குதிரைகளுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. காடுகளில் யானைகளுக்கு இதுபோல சிப் பொருத்தப்படுவது உண்டு. கோவாவில் தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. சிப் பொருத்துவதால் நாய்களின் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 6 கால்நடை மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை வளர்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 5 மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் மருத்துவ கிளினிக்குகளிலும் இந்த சிப்புகளை பொருத்தலாம். மேலும், இதற்காக தனியார் கால்நடை மருத்துவ நிலையங்களையும் ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

The post 4000 தெரு நாய்களின் உடலில் அரிசி வடிவ ‘சிப்’வீட்டு நாய்களுக்கு மைக்ரோ ‘சிப்’ பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்: சென்னை மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Intensive ,Chennai ,Chennai Municipal Corporation ,Chennai Municipal Severity ,
× RELATED சென்னையில் நாய்க்கு வாய்மூடி...