நாகை – இலங்கை இடையே பிப்.22 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்!

நாகை: நாகை – இலங்கை இடையே பிப்.22 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை 2023ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மூலம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கப்பல் இயக்கப்பட்டது.

வாரத்தில் 5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகை – இலங்கை இடையே பிப்.22 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இரு மார்க்கத்திலும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம். இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post நாகை – இலங்கை இடையே பிப்.22 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: