புதுடெல்லி: வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கு என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்துள்ளார். கடந்த 1990களின் துவக்கத்தில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னை தீவிரமாக இருந்தது. ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, பாபர் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, 1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தொடரப்பட்ட அஸ்வினி குமார் உட்பட தொடர்ந்த ஆறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,இதுகுறித்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991ன் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் வழக்குகள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
மேலும் வழிபாட்டு தலங்கள் தொடர்பான வழக்கில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தரப்பிலும் இடையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991ன் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும். மேலும் இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் மார்ச் மாதத்தில் ஒருநாள் பட்டியலிட்டு விரிவாக விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
The post வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவிப்பு appeared first on Dinakaran.