திருவள்ளூர், பிப். 17: திருவள்ளூர், பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் மேற்கண்ட கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடையின் பெயர் பலகை மற்றும் கீழ் பகுதியில் கடையின் விளம்பரப் பலகையை வைத்து பொது மக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் நடந்து சென்றதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள கடைக்காரர்களுக்கு நடைபாதை ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்ற வேண்டும் என முறையாக அறிவிப்பு செய்தனர். ஆனால் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசு உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்னான்டோ, உதவி பொறியாளர்கள் பிரசாந்த், அரவிந்த், வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யும் பணி திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள சாலையின் இரண்டு புறமும் தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.