சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை துணை தூதரகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் உதவியாளராக பணியாற்றிய செந்தில்குமாரி, 2018ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் செந்தில்குமாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால், மனுதாரர் ஒப்பந்த தொழிலாளர் எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனு நிராகரிப்பை எதிர்த்து செந்தில்குமாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு நிறைவேற்றிய தூதரக உறவு சட்டப்படி, தூதரகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இந்திய சமூக பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தாது எனக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, இந்தியாவின் சமூக பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தும் எனக் கூறி, செந்தில் குமாரியை மீண்டும் பணியில் சேர்க்க சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
The post பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை துணை தூதரகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.