- சென்னை
- அமெரிக்க அரசாங்கம்
- Mutharasan
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- டொனால்டு டிரம்ப்
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- இந்தியா
- இந்தியர்கள்
- குஜராத்
- கம்யூனிஸ்டுகள்
- தின மலர்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனோல்டு டிரம்ப், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களை சேர்ந்த 104 இந்தியர்கள் கைகள், கால்களில் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் ஏற்றி, பஞ்சாப் அமிர்தசரஸ் விமானம் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்களின் மீதும் அவர்கள் விருப்பப்படி, இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறார்.
ஒன்றிய பாஜ அரசும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், செயற்கை சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரியை வெகுவாக குறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது. 2வது முறையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள டொனோல்டு டிரம்ப் அதிகார மமதையில், ஆவணத் திமிரோடு, இந்தியர்கள் மீது எதிர் நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருவதை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு தெரிவிக்கும் போது, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை வெறியேற்றும் போது, கை, கால்களில் விலங்கு போடுவது 2012 முதல் வழக்கத்தில் உள்ள நடைமுறை தான் என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசின் ஆணவச் செயலையும், அதனை ஆதரித்து பேசும் ஒன்றிய பாஜ அரசின் நிலையினை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் டிகேஎஸ்.இளங்கோவன் (திமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருமாவளவன் (விசிக), வைகோ (மதிமுக), பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), கலி பூங்குன்றன் (திக), காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி), ஆ.அருணாச்சலம் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமெரிக்க அரசின் ஆணவ செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் தகவல் appeared first on Dinakaran.