×

தாம்பரத்தில் மக்கள் குறைதீர் முகாம் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் 2 மற்றும் 4வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்கள், 2வது மண்டல அலுவலகம் மற்றும் 4வது மண்டலத்துக்குட்பட்ட மேற்கு தாம்பரம், அம்பேத்கர் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

2வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், தாம்பரம் மாநகராட்சியின் சார்பில் 15 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் மருத்துவப் பெட்டகங்கள், 10 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், 17 பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், 1 பயனாளிக்கு காலிமனை வரி செலுத்திடவும், 19 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி செலுத்துவதற்காகாகவும் அட்டைகள், 13 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 3 பயனாளிகளுக்கு குடியிருப்பு வீட்டிற்கான கிரையப் பத்திரங்கள், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தொழில் கடனுதவிகள், தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் 12 பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்திற்கான ஆணைகள் உள்ளிட்ட 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 708 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்ந்து அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக 3 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், தாம்பரம் மாநகராட்சியின் சார்பில் 15 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் மருத்துவப் பெட்டகங்கள், 10 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், 2 பயனாளிகளுக்கு காலிமனை வரி செலுத்திடவும், 4 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி செலுத்துவதற்காகாகவும் அட்டைகள், 4 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகள், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட மளிகைக் கடை, எண்ணெய் மற்றும் மாவு ஆலை, இட்லி மாவு உற்பத்தி, மின்சாரத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு கட்டண மாற்றம், 8 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் மற்றும் 8 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றக்கான அட்டைகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 15 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 542 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரத்தில் மக்கள் குறைதீர் முகாம் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Grievance Redressal Camp ,Tambaram ,Minister ,Tha.Mo.Anparasan ,Tambaram Corporation ,West Tambaram ,Ambedkar Wedding Hall… ,People's Grievance Redressal Camp ,Minister Tha.Mo.Anparasan ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு துறை குறைதீர் முகாம்