சென்னை: முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் என தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், ஆவடி உள்பட தமிழகத்தில் பல மாநகராட்சிகளில் வீடு வீடாக குப்பை பெற்று செல்வதற்காக 3 சக்கர பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2020ல் சென்னை ஆழ்வார் திருநகர் லட்சுமி நகர் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி குப்பை வாகனம், மோதியதில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 3 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதேயடுத்து, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி குழந்தையின் தந்தை, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பேட்டரி குப்பை வாகனத்தை இயக்கியவர் இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் மட்டும் தான் வைத்துள்ளார்.
இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தவர் மூலம் 3 சக்கர பேட்டரி வாகனத்தை இயக்க செய்தது சட்டவிரோதமாகும். விபத்தை ஏற்படுத்திய பேட்டரி வாகனத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் இன்சூரன்ஸ் செய்திருந்த போதிலும் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர் மூலம் வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே, குப்பை அள்ளும் வாகனம் மோதி விபத்தில் சிக்கிய சிறுமிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாயை வழங்க வேண்டும். அதனை மாநகராட்சியிடம் இருந்து இன்சூரன்ஸ் நிறுவனம் வசூலித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post மாநகராட்சி குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு: வாகன விபத்து வழக்கு நீதிமன்றம் உத்தரவு; லைசென்ஸ் இன்றி 3 சக்கர பேட்டரி வாகனம் இயக்குவது சட்ட விரோதம் என அறிவிப்பு appeared first on Dinakaran.