மானாமதுரை, பிப். 13: சின்னகண்ணணூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், இந்த ஊராட்சியில் 2023-24ம் நிதியாண்டில் 17 வளர்ச்சிப் பணிகள் ரூ.39 லட்சம் மதிப்பீட்டிலும், நடப்பாண்டில் 38 வளர்ச்சிப் பணிகள் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும், இதுதவிர, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் 3 பணிகளும், நடப்பாண்டில் தகுதியுடைய பயனாளிகளிடமும் மற்றும் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழும், உரிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 58 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 8 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஆணை, வேளாண்மைத்துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.2,500 மதிப்பீட்டிலான சிறுதானியம்,
கேழ்வரகு மற்றும் உயிரிஉரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15,600 மதிப்பீட்டிலான தென்னை மற்றும் எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்திற்கான இடுபொருட்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தலா ரூ.ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான மருந்து பெட்டகம், 2 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 318 மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான தொழில் மானிய கடனுதவிக்கான ஆணை,
மகளிர் திட்டத்தின் சார்பில் 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளுக்கான ஆணை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டை என ஆக மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 418 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கார்த்திகேயன், மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சின்னகண்ணணூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.