காங்கயம், பிப்.13: காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை முடிந்த பின்னர் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதிலும், எதிரே வருவது தெரியாத அளவுக்கும் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதலே மலை பிரதேசங்களில் காணப்படும் மூடு பனி போல் எதிரே வரும் வாகனங்கள், ஆட்கள், வீடுகள், விளைநிலங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு 8 மணி வரை காணப்படுகிறது.
நெடுஞ்சாலை மற்றும் கிராம பகுதிகளிலும் பைக், வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது. இரவில் குளிர், பகலில் வெயில் என சீதோஷ்ண நிலை மாறுபாட்டு காணப்படுவதால் சிறியவர்கள், பெரியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
The post காங்கயத்தில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.