* மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம்
சென்னை: நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் தான் ஈரோடு கிழக்கு வெற்றி எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, கழகத்தின் வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் கட்சிக்கும், தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றி. தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் திமுகவின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள், அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021ம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம் தான் இந்த வெற்றி. தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது அதிமுக. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கி விட்டது.
தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அதிமுக இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது. மகத்தான திட்டங்களைத் தரும் திமுக அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள்.
தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரகுமாரை, வெற்றி வேட்பாளராக ஆக்கி சட்டமன்றத்துக்குள் அழைத்து வர உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் முத்துசாமி உள்ளிட்ட கலைஞரின் உயிரினும் மேலான அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார். எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
* சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது
The post நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.