காலே: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 2 பேட்ஸ்மேன்கள் அதிரடி சதம் விளாசியதால் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸி கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் 242 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஆஸி அணி, நேற்று முன்தினம் 2வது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 2வது நாள் துவக்கத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். டிராவிஸ் ஹெட் 21, உஸ்மான் கவாஜா 36, மார்னஸ் லபுஷனே 4 ரன்னில் அவுட்டாகினர். இருப்பினும் 4 மற்றும் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், அலெக்ஸ் கேரியும் அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தீவிர முயற்சிகள் செய்தும் அவர்களை அசைக்க முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸி அணி, 80 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் 120, அலெக்ஸ் கேரி 139 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
முதல் டெஸ்டில் ஆஸி அணி சிறப்பாக ஆடி, 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த போட்டியில் ஆஸியின் உஸ்மான் கவாஜா, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் இங்லீஸ் சதம் விளாசினர். தற்போது நடந்து வரும் 2வது டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் உள்பட 2 வீரர்கள் சதம் விளாசி ரன் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர். எனவே முதல் டெஸ்டை போன்று இந்த டெஸ்டிலும் இமாலய ரன் குவிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
The post இலங்கையுடன் 2வது டெஸ்ட் சதங்கள் போடு… சிகரம் தொடு! பேட்டிங்கில் ஆஸி விஸ்வரூபம் appeared first on Dinakaran.