கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் காலை 6.51 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை 8.34 மணியளவில் கோவைக்கு வந்தது. ஆனால், விமான நிலைய பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, அரை மணி நேரத்திற்கும் மேலாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பின்னர் கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
232 பயணிகளுடன் டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த இண்டிகோ விமானம் தரையிறக்க முடியாததால், கொச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர், கொச்சியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தது. இதேபோல சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
The post கோவையில் கடும் பனி மூட்டம் வட்டமடித்த மும்பை விமானம்: கொச்சினுக்கு அனுப்பப்பட்ட டெல்லி பிளைட் appeared first on Dinakaran.
